ஆப்நகரம்

கோவையில் மீண்டும் சைக்கோ தொல்லை..! படுக்கையறையை நோட்டமிடுவதால் பரபரப்பு

கோவை குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளின் படுக்கை அறையில் பூட்டாமல் இருக்கும் ஜன்னல் கதவுகளை திறந்து நோட்டமிடும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Oct 2020, 9:36 pm
கோவை இடையர்பாளையம் மருத நகர் பகுதியில் கடந்த 10 மாதம் முன்பு இரவு நேரங்களில் வீடுகளின் படுக்கை அறையில் மூடாமல் இருக்கும் ஜன்னல்களை திறந்து நோட்டமிடும் சைக்கோ திருடன் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
Samayam Tamil coimbatore thief cctv


இது தொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் இரவு நேரங்களில் ரோந்து பணியை அதிகப்படுத்தியன் காரணமாக கடந்த மாதங்களாக சைக்கோ திருடனின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், மீண்டும் கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள பூம்புகார் நகர், மருத நகர், ஸ்ரீனிவாச நகர் பகுதியில் அதே சைக்கோ திருடன் நடமாட்டம் இருப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று இரவு 10.15 மணியளவில் மருத நகர் பகுதியில் நுழைந்த சைக்கோ திருடன், தனது இரு சக்கர வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து உள்ளே சென்றுள்ளார்.


தொடர்ந்து உள்ளே சென்று பூட்டாமல் இருந்த வீட்டின் படுக்கை அறை ஜன்னல் கதவை திறந்து நோட்டமிட்டுள்ளார். இதனை பார்த்து பக்கவீட்டார் சத்தம் போடவே, திருடனை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் உஷாரான சைக்கோ திருடன் அவனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில், சைக்கோ திருடன் வருவதும் படுக்கையறையை நோட்டமிடுவதுமான காட்சிகள் அந்த வீட்டின் வெளியே பொருத்தியிருந்த சிசிடிவியில் கேமராவில் பதிவாகியிருந்தது.

இது குறித்து துடியலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து சைக்கோ திருடன் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு நேரங்களில் வீட்டின் வெளியே என்ன நடக்கிறது என்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போலீசார் எச்சரித்துள்ளனர். தெருக்களில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் இரவு நேரங்களில் வீட்டின் அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளை உள்புறம் பூட்டப்பட்டுள்ளதா என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும், எனவும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி