ஆப்நகரம்

சிறுமியை கொன்று அண்டாவில் மறைத்த கொடூரம் - சேலம் இளைஞருக்கு தண்டனை அறிவிப்பு!

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 வருடம் சிறை தண்டனை வழங்கி சேலம் மகிலா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Samayam Tamil 19 Feb 2019, 3:53 pm
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ளது தெலுங்கனூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி(19). இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
Samayam Tamil Rape Case


அதாவது, ஒரு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், பள்ளிக்கு அனுப்பி வைக்காமல் வீட்டிலேயே பெற்றோர் வைத்து இருந்தனர். இந்நிலையில் கடந்த 21.7.2016 அன்று தனது வீட்டில் திருமூர்த்தி இருந்துள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி தர்ஷினி, மளிகைக் கடைக்கு சென்று சாக்லேட் வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுமியை பார்த்த திருமூர்த்தி, தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதில் படுகாயமடைந்த சிறுமி இறந்துவிட்டாள். இதனால் அதிர்ச்சி அடைந்து, சிறுமியின் சடலத்தை வீட்டில் உள்ள அண்டாவில் மறைத்து வைத்து விட்டார். இந்த சூழலில் சிறுமி காணாததால், அவளது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை.

பின்னர் கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரித்து வந்த போலீசார், திருமூர்த்தி குறித்து அறிந்தனர். இதனால் சந்தேகம் ஏற்பட்டு, அவனது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ஒரு அண்டாவில் சிறுமியின் சடலம் இருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் பின்னர் திருமூர்த்தி கைது செய்யப்பட்டு ராசிபுரத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டான். பிறகு திருமூர்த்தி ஜாமீனில் வெளியில் வந்தான். இந்த வழக்கு விசாரணை சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, திருமூர்த்திக்கு 10 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தண்டனை பெற்ற திருமூர்த்தியை, செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி