ஆப்நகரம்

முத்தூட் பைனான்ஸ் கொள்ளை: அரை மணி நேர திகில், 6 பேர் கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்கள் பிடிபட்டனர்.

Samayam Tamil 23 Jan 2021, 2:21 pm
ஓசூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்த போலீசார் பல கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil six northerners arrested for robbing jewellery at muthoot finance in hosur
முத்தூட் பைனான்ஸ் கொள்ளை: அரை மணி நேர திகில், 6 பேர் கைது..!


​ஓசூர் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் எம்ஆர்ஆர் என்ற தனியாருக்கு சொந்தமான நான்கு மாடி கட்டடம் உள்ளது. அந்த கட்டடத்தின் 2வது மாடியில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) காலை 9 மணி அளவில் மேலாளர் சீனிவாச ராகவ் உள்ளிட்ட நான்கு பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, தலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டு அடையாளம் காண முடியாத வகையில் 6 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்தது. அந்த கும்பலில் வாடிக்கையாளரை போல வெறும் முகக்கவசம் மட்டும் அணிந்திருந்த ஒருவர், நிறுவன காவலாளியை துப்பாக்கி காட்டி மிரட்டி உள்ளே அழைத்து வந்துள்ளார்.

​பட்டப்பகலில் துணிகரம்

தொடர்ந்து மேலாளர் உள்ளிட்ட நான்கு பேரை ஒவ்வொருவராக வரவழைத்து கை கால்களை கட்டி அங்கிருந்த வேறொரு அறைக்குள் பூட்டியுள்ளது அந்த கும்பல். பின்னர் மேலாளர் சீனிவாச ராகவை அடித்து தாக்கியவர்கள், அவரிடம் இருந்த லாக்கர் சாவியை வாங்கியுள்ளனர். தொடர்ந்து, லாக்கரில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியுள்ளனர்.

​25 கிலோ தங்கம்

கை கட்டும், வாய் கட்டுமாக கத்தக்கூட முடியாத நிலையில் வங்கி ஊழியர்கள் முடங்கியிருக்க, 9.30 மணி அளவில் பணம் எடுப்பதற்காகா வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார். ஊழியர்கள் கட்டிப்போட்டு இருப்பதை கண்ட அவர். உடனே அவர்களை ஆசுவாசப்படுத்தி ஓசூர் காவல் நிலையத்துக்கு தகவல் கூறியுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் விசாரித்த போது, நிறுவனத்தில் இருந்த லாக்கரில் சுமார் 25 கிலோ எடைமிக்க ரூ. 7 கோடி 40 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

​7 தனிப்படை

தொடர்ந்து வங்கி மேலாளரிடம் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான கொள்ளையர்களின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பாளர் கங்காதர் குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார்.

​6 பேர் கைது

இந்த நிலையில், இன்று காலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் ஐதராபாத்தில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 6 பேரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்த்துள்ளது. அவர்களிடம் இருந்து, ரூ.12 கோடி மதிப்பிலான நகைகள், 7 துப்பாக்கிகள், 2 கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போதுமான பாதுகாப்பு இல்லாதததால் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக சம்மந்தபட்ட முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.

அடுத்த செய்தி