உறக்கத்தில் இருந்த மாணவி, கதவுடைத்து உள்ளே சென்ற ரவுடிகள்..! நள்ளிரவில் கொடூரம்
இரவில் கதவுடைத்து உள்ளே சென்ற ரவுடிகள் சிறுமியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொத்து கொத்தாக மடியும் சிறுமிகள்
ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான தலித் பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆறாத சூழலில் உபியில் அடுத்தடுத்து சிறுமிகள் சூறையாடப்படும் கொடுமைகள் அம்மாநில அரசை தலைகுனிய வைத்துள்ளது.
12ஆம் வகுப்பு மாணவி
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டம் ரசூல்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நீலம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). 16 வயதாகும் இந்த சிறுமி அப்பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் வழியில் மூன்று தினமும் ரோமியோக்கள் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கிண்டலடிப்பது வழக்கம்.
பதிலடிக்கு பழி
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை வெளியில் சென்று வீட்டுக்கு வந்துகொண்டிருந்த சிறுமியை மனீஷ் சவுத்ரி யாதவ், சிவ்பால் யாதவ், கவுரவ் சாக் ஆகிய மூன்று ரவுடிகள் ஈவ் டீசிங் செய்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த சிறுமி அவர்களை காட்டமாக திட்டி பதிலடி கொடுத்துள்ளார். தொடர்ந்து வீட்டுக்கு வந்த சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறிவிட்டு பின்னர் வழக்கமாக வீட்டு வேலைகளை செய்துள்ளார்.
இரவில் புகுந்த ரவுடிகள்
ஆனால், சிறுமி திட்டியதால் அவமானத்தில் இருந்து வந்த ரவுடிகள் நீலத்தை கொலை செய்ய திட்டமிட்டனர். இந்நிலையில், அன்று இரவே சிறுமியின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற ரவுடிகள், படுக்கைறையில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை அடித்து தாக்கியுள்ளனர். மகளின் அலறல் சத்தத்தை கேட்டு பதறி வந்த பெற்றோர்கள் எவ்வளவோ முயற்சித்தும், அந்த கும்பல் சிறுமியின் தலையில் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியது.
கண்முன்னே மகள் பலி
துப்பாக்கி சூட்டினால் சம்பவ இடத்திலேயே பலியான சிறுமியை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய பெற்றோரின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடிய பின்னரே போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரவுடிகள் இரண்டு பேரை கைது செய்துள்ள நிலையில் எஞ்சிய நபரை தேடி வருகின்றனர்.
விசாரணையில் முரண்
விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது, ''சிறுமியை கொலை செய்த மூன்று பேர் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். சிறுமியின் பெற்றோரிடம் நடந்தவற்றை குறித்து கேட்டறிந்தோம், அதில் முரண்பாடுகள் உள்ளன. தெளிவான விசாரணையில் மேற்படி உண்மைகள் தெரிய வரும்'' என்று கூறினர். ஆனால், போலீசார் விசாரணை செய்வதில் பாகுபாடு காட்டுவதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். பெண்கள் வெளியில் சென்றாலும் தவறு, தனக்கு இழைக்கப்படும் தவறை தட்டி கேட்பதும் தவறென்றால் இந்தியாவில் பெண்கள் வாழுவதற்கே தகுதியற்றவர்களா என்ற கேள்விதான் எழுகிறது.