ஆப்நகரம்

தந்தையை கொன்று பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து புதைத்த கொடூர மகன் - திகில் க்ரைம் சீன்

ராணிப்பேட்டை அருகே சொத்து தகராறில் தந்தையை கொன்று பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து புதைத்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 May 2022, 5:26 pm
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் வசித்து வருபவர் குமரேசன்(78). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவருக்கு குணசேகரன் என்ற மகனும், காஞ்சனமாளா, யமுனா, பரிமளா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.
Samayam Tamil murder


குமரேசன் மூத்த மகளான காஞ்சனா மாளாவின் கணவர் இறந்து விட்டதால் தான் தங்கியிருந்த வீட்டின் முதல் தளத்தில் காஞ்சனமாலாவுடன் வசித்து வந்தார் அவரது மகன் குணசேகரன் தரைதளத்தில் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்

மேலும், சென்னை வளசரவாக்கத்தில் குமரேசனுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் மாதந்தோறும் 2.5 லட்சம் ரூபாய் வந்துள்ளது. தனது ஓய்வூதியம் மற்றும் வாடகை பணத்தை வைத்து குமரேசன் தனது மகள்களுக்கே செலவு செய்து வந்துள்ளதால் மகன் குணசேகரன் தனது தந்தை மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காஞ்சனா மாளா கடந்த 15 ஆம் தேதி வெளியே சென்ற போது வீட்டில் குமரேசன் தனியாக இருந்ததுள்ளார். அந்த நேரத்தை பயன்படுத்தி ஆத்திரத்தில் சொந்த தந்தையை கொடூரமாக கொன்று டிரம்மில் அடைத்து அதில் உப்பினை கொட்டி மகன் குமரேசன் பதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

11-ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்கள்... விழுப்புரத்தில் நடந்த கொடுமை

இதனைத் தொடர்ந்து காவேரிப்பாக்கத்தில் உள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை குணசேகரன் வாங்குவதாக கூறி நிலத்தை பார்வையிட்டுள்ளார். அப்போது வெங்கடேசனிடம் தனக்கு சூனியம் வைத்திருப்பதாகவும், அதனை மந்திரவாதியின் உதவியோடு எடுத்து பிலாஸ்டிக் டிரம்மில் அடைந்துள்ளதாகவும் புதிதாக வாங்கும் இடத்தில் புதைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய வெங்கடேசன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆடு மேய்க்கும் பெருமாளின் உதவியோடு காவேரிப்பாக்கம் தஞ்சை நகரில் உள்ள வெங்கடேசனுக்கு சொந்தமான இடத்தில் கடந்த19 ஆம் தேதி பட்டபகலில் அந்த டிரம்மை புதைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது தந்தை வீட்டில் இல்லாததால் சந்தேகமடைந்த காஞ்சனாமாளா, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வீட்டிற்கு சென்று பார்த்தபோது துர்நாற்றம் வீசியபடி அங்காங்கே ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

போலீஸ் விசாரணை மேற்கொண்டபோது காஞ்சனாமாளாவுடன் சேர்ந்து தந்தையை தேடிக்கொண்டிருந்த மகன் குணசேகரன் திடீரென மாயமாகியுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார், குணசேகரனின் மனைவியான வசந்தியிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 18ம் தேதி காவேரிப்பாக்கத்தில் உள்ள வெங்கடேசனை சந்திக்க சென்றதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் காவேரிப்பாக்கம் போலீசார் உதவியோடு வெங்கடேசன் மற்றும் பெருமாளை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், குமரேசன் தனக்கு சொந்தமான இடத்தை வாங்கி அதில் கடை கட்டுவதற்கு திட்டமிட்டதாகவும், அதற்கு முன்னதாக தனக்கு சூனியம் வைத்திருப்பதால் அதனை மந்திரவாதியின் உதவியோடு எடுத்து டிரம்மில் அடைந்துள்ளதாகவும், அதனைத்தான் வாங்கப் போகும் இடத்தில் புதைக்க வேண்டும் என கூறி தனது இடத்தில் புதைத்ததை தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து புதைக்கப்பட்ட குமரேசன் உடலை சென்னையில் இருந்து காவேரிப்பாக்கத்திற்கு எடுத்து வந்த டாடா ஏசி ஓட்டுநர் திருமூர்த்தி, நில உரிமையாளர் வெங்கடேசன், ஆடு மேய்ப்பவர் பெருமாள் ஆகியோர் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட நெமிலி வட்டாட்சியர் ரவி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி சட்ட மருத்துவ மருத்துவர் மகேந்திரன் மற்றும் தீபா, காவல் ஆய்வாளர் ஆபிரகாம் புரூஸ் முன்னிலையில் புதைக்கப்பட்ட குமரேசன் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யும் பணி நடந்தது. மேலும் தலைமறைவாக உள்ள குணசேகரனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி