ஆப்நகரம்

கொடநாடு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடி-க்கு மாற்றியுள்ளார்.

Samayam Tamil 30 Sep 2022, 5:00 pm
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்தது. இதில் ஏராளமான ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
Samayam Tamil kodanad case


இந்த வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு தனிப்படையினரும் பிரிந்து சென்று பலரிடம் விசாரணை நடத்தினர். முக்கிய குற்றவாளியான சயான், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சம்சீர் அலி, மனோஜ்சாமி மற்றும் அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 230க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது.

குறிப்பாக இந்த விசாரணையில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் அவரது உதவியாளர் பழனிசாமி அதே போல பாண்டிச்சேரி பகுதி ஓசியன் ரிசார்ட் நிர்வாக இயக்குனர் நவீன் பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டி,மதுரையைச் சேர்ந்த தொழில் அதிபர் லாஜி ஹொரா, மன்னார்குடி சேரன் குளத்தைச் சேர்ந்த குணசேகரன், நமது அம்மா நாளிதழில் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜு ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், இதுவரை கொடநாடு விவகாரத்தை தனிப்படை விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கு மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி