ஆப்நகரம்

'நல்லா யூஸ் பண்ணிகிட்டே'... காதலனால் இளம்பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை முயற்சி..!

தென்காசியில் காதலனால் ஏமாற்றபட்ட இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

Samayam Tamil 13 Jan 2022, 2:09 pm
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த பெரியமுத்து என்பவரது மகள் செல்வமணி (25). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஆலங்குளத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ் (27) என்பவரும் பள்ளியில் படிக்கும் போதே சுமார் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil பெண் தற்கொலை முயற்சி


செல்போனில் தங்கள் காதலை வளர்த்து வந்த இருவரும் கடந்த 6 மாதங்களாக கணவன், மனைவி போல் தனிமையில் சந்தித்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், இருவரும் தனிமையில் இருந்த போது செல்வமணியின் உறவினர் நேரில் பார்த்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் இருவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து இது சம்பந்தமாக கடந்த 03 - 11 - 2021 அன்று ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் செல்வமணி தரப்பில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சதீஷ் செல்வமணியை பார்த்து இவர் யார் என்று தெரியாது என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வமணி தன்னுடன் சதீஷ் பழகியதற்கான ஆதாரங்களாக இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் மெசேஜ், வீடியோக்கள் அனைத்தையும் ஆதாரமாக கொடுத்ததும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் செல்வமணியை கண்டித்துள்ளனர்.

சதிஷ் மீது புகார் அளிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் இல்லையென்றால் 2 தினங்களுக்குள் ஊர் பெரியவர்களிடம் பேசி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி மகளிர் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், காவல் நிலையம் சென்று விட்டு வீடு திரும்பிய செல்வமணி காரைவிட்டு இறங்கி நேராக சதீஷின் வீட்டிற்கு சென்றபோது சதீஷின் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து செல்வமணியை கடுமையாக தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளனர். இருப்பினும் செல்வமணி சதீஷ் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா செய்தார். இதனால் ஊரிலுள்ள அக்கம்பக்கத்தினர் கடையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடையம் ஆய்வாளர் ரகுராஜன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறைப்படி ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையடுத்து செல்வமணி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகார் மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தி அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

4 மாத கர்ப்பிணி மீது சந்தேகம்… கணவனுக்கு புது ரூட்டில் பாடம் புகட்டிய மனைவி!

இதனையடுத்து நியாயம் கிடைக்கவில்லை என கூறி செல்வமணி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இது சம்பந்தமாக விஷம் குடித்துவிட்டு அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் இதற்கு தானே நீ ஆசைப்பட்டாய் என கண்ணீரோடு பேசியுள்ளார். தற்கொலைக்கு முயன்ற இளம் பெண் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி