ஆப்நகரம்

திருவாரூரில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சார வாகனத்தை உடைத்த பாஜகவினர்..!

திருவாரூர் அருகே நாம் தமிழர் கட்சியின் பிரச்சார வாகனத்தையும், கொடி கம்பத்தையும் பாஜகவினர் சேதப்படுத்தியுள்ளனர்.

Samayam Tamil 4 Feb 2021, 7:58 pm
திருவாரூர் மாவட்டம் திருக்கோட்டை பகுதியில் உள்ள மகாமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் இஸ்மாயில் (25). இவர் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக உள்ளார். மேலும், மன்னார்குடி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான ராம அரவிந்தன் என்பவரது கார் டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார்.
Samayam Tamil file pic


தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் நாம் தமிழர் கட்சியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதுபோல, ராம அரவிந்தனும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது பிரச்சார வாகனத்துக்கு இஸ்மாயில் ஓட்டுநராக உள்ளார்.

இந்த சூழலில் நேற்று இரவு பிரச்சாரம் முடிந்ததும் ஜீப்பை கொண்டு வந்து தனது வீட்டருகே இஸ்மாயில் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜகவை சேர்ந்த சிலர் ஜீப்பை இங்கு நிறுத்தக்கூடாதென்று இஸ்மாயிலை மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து காலையில் எழுந்து பார்த்த போது பிரச்சார ஜீப்பின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.


நைட் லேட்டா வரும் கணவன், கட்டிலுக்கு அடியில் லீலை..! நாசமான குடும்பம்

மேலும், திருக்கோட்டை அருகே அமைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சி கொட்டி கம்பமும் பாதியாக உடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உடைக்கப்பட்ட கொடி கம்பம் அருகே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலர் ஒன்று திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து, திருக்கோட்டை தொகுதி செயலாளர் கொடுத்த புகாரின் பேரில், பிரச்சார ஜீப்பை உடைத்து சேதப்படுத்திய பாஜகவை சேர்ந்த கணேசனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முருகேசன் மற்றும் கார்த்திக் ஆகியோரை தேடி வருகின்றனர். இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அங்கு உடைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை நீக்கிவிட்டு, புதிய கம்பத்தை ஏற்றினர்.

அடுத்த செய்தி