ஆப்நகரம்

'10 மாதத்தில் 36 லட்சம் வட்டி' கிடைக்கும்.. 85 கோடி ருபாய் ஏப்பம்.. விழுப்புரத்தில் பகீர் மோசடி..!

திண்டிவனத்தில் தனியார் நிறுவனம் நடத்தி 85 கோடி மோசடி செய்த சம்பவத்தில் 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு கைது செய்தனர்.

Samayam Tamil 18 Mar 2023, 7:35 pm
தமிழ்நாட்டில் நிதி நிறுவன மோசடிகளால் முதலீட்டார்கள் பணமிழந்து தவிக்கும் சூழலில் இதுபோன்ற பல இடங்களில் கோடிக்கணக்கான பண மோசடி சம்பவங்கள் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
Samayam Tamil scam


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகம் அருகில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தை வினாயகபுரத்தை சார்ந்த மாயகிருஷ்ணன் என்பவர் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் 50 ஆயிரம் செலுத்தினால் 10 மாதம் கழித்து 90 ஆயிரமும், 1 லட்சம் செலுத்தினால் 10 மாதங்கள் கழித்து 1 லட்சத்து 80 ஆயிரமும், 2 லட்சம் செலுத்தினால் 3 லட்சத்து 60 ஆயிரமும், 5 லட்சம் செலுத்தினால் 9 லட்சமும், 10 லட்சம் செலுத்தினால் 18 லட்சமும், 20 லட்சம் செலுத்தினால் 10 மாதங்கள் கழித்து 36 லட்சமும் வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தினர் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா வேளாந்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணுலிங்கம் (51) உள்ளிட்ட அவருக்கு தெரிந்த 9 பேர் சேர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 55 லட்சத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் அந்நிறுவனத்தினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகியிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் அந்நிறுவன நிர்வாக இயக்குனர்கள் மாயகிருஷ்ணன், மஞ்சுளா, மாயகிருஷ்ணன் மனைவி பிரபாவதி மற்றும் திண்டிவனம் பகுதியை சேர்ந்த கவுதம், மதிவாணன், முருகன், வீரமணி, செந்தில்குமார் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அவர்கள் 8 பேரும் சேர்ந்து, இதுபோன்று 7 ஆயிரம் பேரிடம் இருந்து 85 கோடி வரை பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மாயகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வீரமணி (46), செந்தில்குமார் (45) ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் மாயகிருஷ்ணன் உள்ளிட்ட மற்ற 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி