ஆப்நகரம்

போலீஸ் இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்? பிடிஆர் கார் மீது ஆவேசமாக பாய்ந்த பாஜக கும்பல்

மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது செருப்பு வீசிய பாஜகவினர் மிக உக்கிரமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Aug 2022, 3:46 pm
ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக மதுரையில் அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்க விரைந்துள்ளனர். அது போல தமிழக நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை விமான நிலையம் நோக்கி வந்தபோது காரை இடை மறித்த பாஜகவினர் கொலை வெறியுடன் அந்த காரை தாக்கியத்துடன் செருப்பை வீசி எறிந்தனர்.
Samayam Tamil madurai ptr


வெறும் 10 பேர் கொண்ட அந்த கும்பல் போலீஸ் இருப்பதையும் கண்டுகொள்ளாமல் கெட்ட கெட்ட வார்த்தைகளில் அமைச்சரை ஒருமையில் பேசி தாக்க முயன்ற சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. நல்ல வேலையாக அப்போது போலீஸ் இருந்ததால் அமைச்சர் பாதுகாப்பாக அங்கிருந்து சென்றுள்ளார். திமுகவுக்கு பரம எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவினர் கூட இப்படி நடந்துகொள்ள மாட்டார்கள் என்று அரசியல் தெரிந்தவர்கள் கருதுகின்றனர்.

அதிகபட்சமாக கருப்பு கொடி காட்டுவார்கள் இல்லையென்றால் காரை முற்றுகையிடுவார்கள் ஆனால், அரசு நிகழ்ச்சியில் பலத்த பாதுகாப்புடன் வந்த அமைச்சரை ஒருமையில் திட்டி செருப்பை வீசியது பாஜகவினரின் உச்சகட்ட அராஜகம் என்று கண்டனம் தெரிவிக்கின்றனர்.

சரி, எதற்காக பாஜகவினர் இப்படி செய்தார்கள் என்று கேட்டபோது, அஞ்சலி நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசு நிகழ்ச்சியில் பாஜகவினர் ஏன் கூட்டமாக வந்ததாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகின்றது. மேலும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், பாஜக கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் பாஜகவினரை வெளியேறுமாறு கூறினாராம்.

அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு... மதுரையில் பாஜகவினர் வெறித்தனம்..!

மேலும், அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகின்றனர். இதற்கிடையே, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எந்த விளக்கமும் இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி