ஆப்நகரம்

தாயுடன் சண்டை போட்ட அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி.. காஞ்சிபுரத்தில் பகீர் சம்பவம்

காஞ்சிபுரம் அருகே திம்மையன்பேட்டையில் அம்மாவுடன் சண்டை போட்ட அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி

Samayam Tamil 13 Mar 2023, 3:49 pm
காஞ்சிபுரம் அருகே திம்மையன்பேட்டை பகுதி கீழத்தெருவில் வசித்து வருபவர் தெய்வயானை (எ) வள்ளியம்மாள். இவருக்கு சரவணன் (51) மற்றும் வடிவேல் (40) என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். சகோதரர்கள் இருவரும் பட்டு சேலை நெசவு தொழில் செய்து வருகிறார்கள்.
Samayam Tamil kanchipuram news


இதில் அண்ணன் சரவணனுக்கு திருமணமாகி மனைவி 5 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற நிலையில் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார். இந்த நிலையில், தாய் மற்றும் இரு சகோதரர்களும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அண்ணன் சரவணன் தனது அம்மாவுடன் தகராறு செய்து கொண்டு உள்ளதை கண்ட தம்பி வடிவேலு கண்டித்துள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்த சரவணன் தம்பி வடிவேலுவின் கையை கடித்துள்ளார். எதிர்பாராத இந்த தாக்குதலில் ஆவேசம் அடைந்த வடிவேலு அருகில் இருந்த கட்டையை எடுத்து சரவணனின் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

எதிர்பாராத இந்த சண்டையினால் மகன் சரவணன் உயிர் இழந்ததைக் கண்டு தாய் வள்ளியம்மாள் கதறி அழுதார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வாலாஜாபாத் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்து வடிவேலுவை கைது செய்து சரவணன் உடலை பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அம்மாவுடன் சண்டை போட்ட அண்ணனை, தம்பியே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி