ஆப்நகரம்

'உங்க சாதிதான் வெட்டுச்சி'... 'இல்ல இது பொய்'... அடுத்த தலைமுறைக்கு இவர்கள் சொல்ல வருவது?

அரக்கோணம் இரட்டைக்கொலைக்கு காரணம் சாதி மோதல் இல்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில் இங்குள்ள சாதி கட்சி தலைவர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர்.

Samayam Tamil 13 Apr 2021, 6:42 pm
அரக்கோணம் சோகனூரில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அர்ஜுனன், சூர்யா என்ற 2 தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த கொலைக்கு சாதி வன்முறைதான் காரணம் என்று குற்றம்சாட்டிய திருமாவளவன், ''தமிழகத்தில் தான் ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கின்றன. இதற்கு காரணம், தமிழகத்தில் தான், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் சரிவர பயன்படுத்தப்படுவதில்லை என்றும் தமிழக அரசு தலித் விரோத போக்கை கொண்டுள்ளது'' என்றும் கூறினார்.
Samayam Tamil vck pmk


மேலும், ''அதிமுக வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்காததாலும், மணல் கொள்ளையை எதிர்த்தாலும் தலித் வாலிபர்களை சாதி வெறியர்கள் கொலை செய்ததாக'' அவர் குற்றம் சாட்டினார். அதற்கு எதிர்வினையாற்றிய பாமக அன்புமணி ராமதாஸ், '' படித்தவர்கள், திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை. என, கூறினார். அதற்கு பதிலடி கொடுத்த திமுக எம்எல்ஏ பி. தியாகராஜன், '' நான் பழனிவேல் தியாகராஜன். பி. டெக். கெமிக்கல் இன்ஜினியரிங், எம்.எஸ்., பி.எச்.டி. படித்திருக்கிறேன். நான் திருமவளவனுடன் உள்ளேன்'' என தெரிவித்தார்.

வாய்ப்பை இழந்தவர்கள்

அதனை தொடர்ந்து, அன்புமணியின் கருத்துக்கு திருமாவளவன் தமது ட்விட்டர் பதிவில், '' படித்தவர்கள்- படிக்காதவர்கள் என மக்களைப் பாகுபடுத்தி, உயர்வு - தாழ்வு காண்பது சனாதனப் புத்தியின் விளைச்சலாகும். படிக்காதவர்கள் என்னும் சொல்லாடல் ஆணவத்தின் வெளிப்பாடாகும். அவர்கள் கல்விபெற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் அல்லது வாய்ப்பை இழந்தவர்கள். அதனால் அவர்கள் இழிவானவர்கள் அல்ல'' என கடுமையாக விமர்சித்திருந்தார்.

சாதிக்கு ஒரு கட்சி

தமிழகத்தில் சாதிக்கு ஒரு கட்சி, ஒரு தலைவர், தேர்தல் நேரத்தில் அதை சாதகமாக பயன்படுத்தி கொள்வது போன்றவை வெகுஜன மக்களிடையே அரசியல் புரிதல் போய் சேராமல் இருப்பதற்கும், ஆளுகின்ற கட்சிகளின் சூழ்ச்சமங்கள் புரியாமல் இருப்பதற்கும் வழி வகுப்பதாக சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நெளிவு சுளிவு

ஒரு சாதி கட்சி தலைவரை இன்னொரு சாதி கட்சி தலைவர் விமர்சிப்பதும், அதே நேரத்தில்அந்த சாதியைச் சார்ந்த மக்களுக்கு ஆதரவாக எதிர் கட்சி தலைவர் பேசுவதும் தான் அரசியலில் இவர்களுடைய நெளிவு சுளிவு.

இளைஞர்கள் வேதனை

கடைசியில் அரக்கோணம் இரட்டைக்கொலை சாதி மோதல்தான் என்று ஒரு சமூக மக்கள் நம்பிவிட, அப்படி இல்லை என்று ஒரு பக்கம் விளக்கம் அளிக்க, சட்டம் சொல்லப்போவதை கண்டுகொள்ளாமல் அடுத்த தலைமுறைக்கும் சாதி பிரிவினையை எடுத்து செல்கிறது இத்தகைய குற்றசாட்டுகள் என இளைஞர்கள் சிலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி