ஆப்நகரம்

35 வெடிகுண்டுகள், துப்பாக்கியுடன் இரண்டு ரவுடிகள் கைது; சென்னையில் பரபரப்பு

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் வெடிகுண்டுகள், துப்பாக்கி, விதவிதமான அரிவாள்களுடன் இரண்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 3 Dec 2022, 7:39 pm
சென்னை, வியாசர்பாடி, எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ரவுடி வெள்ளை பிரகாஷ் (32). விழுப்புரம், செஞ்சி தாலுகாவை பூர்வீகமாக கொண்ட இவர் மீது மூன்று கொலை உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரை ஸ்கெட்ச் வெள்ளை பிரகாஷ் என்று அடை மொழியுடன் அழைப்பார்களாம். எதிரியை தீர்த்துக்கட்டுவதற்கு, இவர் ஸ்கெட்ச் போட்டு தந்தால், கொலை விழுவதை தடுக்க முடியாதாம். காவல்துறையின் ரவுடிகள் லிஸ்டில் வெள்ளை பிரகாஷ் ஏ பிரிவு ரவுடியாக உள்ளார்.
Samayam Tamil chennai crime


இவரின் கூட்டாளி செங்குன்றம், வடகரையை சேர்ந்த அப்பு(எ) விக்கிரமாதித்தன் (36) ஆவார். இவர் மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர்கள், போலீசில் ஆஜராகமால், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அதி தீவிர தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் ஆர்.ஆர் நகரில், வாகன சோதனை நடந்தது. அப்பத்து அங்கு காரில் வந்த இருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். ஆனால் காரில் இருந்த நபர்கள் அங்கிருந்து தப்பித்து, கொடுங்கையூர் குப்பை கிடங்கு நோக்கி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர்.

குப்பை மேட்டில் இருந்த ஒரு கட்டிடத்தின் மேலே ஏறி இருவரும் தப்பிக்க முயற்சித்தபோது, இருவரும் தவறி விழுந்தனர். இதில், அவர்களின் கால்கள் முறிந்தன.

பின்னர் அவர்களை, கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள்தான் தேடப்பட்டு வரும் ரவுடிகள் வெள்ளை பிரகாஷ், விக்கிரமாதித்தன் என தெரிந்தது. இவர்களிடம் இருந்து, ஒரு துப்பாக்கி, 12 தோட்டாக்கள், 34 நாட்டு வெடிகுண்டுகள், 35 பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் சிக்கி முக்கி கற்கள் 750 கிராம், இரும்பு ஆணிகள், 2 காட்டு மூங்கில் குச்சிகள், 750 கிராம் நூல் கண்டு மற்றும் அவர்கள் வந்த காரையும் போலீசார் கைப்பற்றினர்.

அடுத்த செய்தி