ஆப்நகரம்

திருச்சி அருகே ஆற்றினை ஆக்கிரமித்து கிரசர் ஜல்லி ஆலைகள் அமைக்கும் பணி மும்முரம்!

திருச்சி அருகே அரசின் எந்தவித அனுமதியின்றி அமைக்கப்படும் கிரசர் ஜல்லி ஆலைகளை மூட வலியுறுத்தி கிராமத்தினர் நேற்று ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Samayam Tamil 10 Jul 2019, 4:25 pm
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நம்பு குறிச்சி ஊராட்சியில். நந்தியாறு ஆற்றங்கரையில் குரு பிரம்மா எண்டர்பிரைசஸ், பரம் என்டர்பிரைசஸ் என்ற இரண்டு கிரஷர் ஜல்லி தொழிற்சாலைகளை அமைப்பதற்கான பணிகளை துவங்கியுள்ளனர்.
Samayam Tamil உரிய அனுமதியின்றி கிரசர் ஜல்லி ஆலைகள் அமைக்கும் பணி மும்முரம்!
உரிய அனுமதியின்றி கிரசர் ஜல்லி ஆலைகள் அமைக்கும் பணி மும்முரம்!


இந்த ஆலைக்கு ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட யாரிடமும் எவ்வித அனுமதியும் பெறாமல் தொழிற்சாலை அமைப்பதற்கான வேலைகளை இரவு பகலாக செய்து வருகின்றனர். மேலும் மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெறாமல் தொழிற்சாலை வேலைகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்;

குரு பிரம்மா எண்டர்பிரைசஸ் நந்தியாறு ஆற்றினை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வருகிறது. அதேபோல பரம் எண்டர்பிரைசஸ் அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வருகிறது. இந்த இரண்டு கிரஷர் ஜல்லி ஆலை செயல்படத் தொடங்கினால் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மேலும் கிரஷர் ஜல்லி பவுடரால் காற்று மாசு மூலம் மூச்சுத் திணறல். சுவாசக் கோளாறு உள்ளிட்ட பலவேறு நோய் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடும்.

இந்த இரண்டு ஆலைகளையும் நிரந்தரமாக மூட வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர், லால்குடி வருவாய் கோட்டாட்சியர், லால்குடி வருவாய் வட்டாட்சியர் ஆகியோரிடம் நேரில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று ஆலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த சிறுகனூர் காவல்துறையினர் மக்களிடம் சமரசம் பேசி, ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆலைகளை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் கிராம மக்கள் அனைவரும் எங்களது வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்

அடுத்த செய்தி