ஆப்நகரம்

பெண் எஸ்.பி. பாலியல் தொல்லை வழக்கு; விழுப்புரம் நீதிமன்றம் புதிய உத்தரவு..!

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் கணவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு.

Samayam Tamil 27 Jun 2022, 7:27 pm
கடந்த 2021ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த போது தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்தார். இதனையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தோடு, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது.
Samayam Tamil dgp rajesh das
dgp rajesh das


இதனைத்தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்கள் இருவர் மீதும் விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 10 மாதங்களாக வழக்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அரசு தரப்பு சாட்சியான சென்னை சிபிசிஐடி எஸ்.பி ஜியாவுல் ஹக் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். இதனையடுத்து சென்னை சிபிசிஐடி எஸ்.பி ஜியாவுல் ஹக்கிடம் நீதிபதி புஷ்பராணி விசாரணை நடத்தி அவர் அளித்த சாட்சியங்களை பதிவு செய்தார். பின்னர் அவரிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து அரசு தரப்பின் 2-வது சாட்சியான பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பியின் கணவரான ஐஏஎஸ் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தரப்பு வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி புஷ்பராணி, வரும் 30-ம் தேதி பெண் எஸ்.பியின் கணவர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகளான காவல்துறை ஏடிஜிபி ஜெயராம், ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அடுத்த செய்தி