ராக்கெட் ராஜா கைது
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை (26) என்பவர் கடந்த கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சாமிதுரை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தென் தமிழகத்தைச் சேர்ந்த பனங்காட்டுப்படை கட்சி தலைவரும் பிரபல ரவுடியுமான ராக்கெட் ராஜா இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
யார் இந்த ராக்கெட் ராஜா
கொலை செய்யப்பட்ட சாமிதுரை தரப்பிற்கும் ராக்கெட் ராஜா தரப்பிற்கும் இடையே ஜாதி ரீதியாக பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று ராக்கெட் ராஜா திட்டப்படி சாமிதுரை கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த வழக்கில் கடந்த பல நாட்களாக நெல்லை மாவட்ட காவல்துறையினர் ராக்கெட்டு ராஜாவை தீவிரமாக தேடி வந்துள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்து அவரும் பதுங்கியுள்ளார்.
இந்த நிலையில் இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நாங்குநேரி டிஎஸ்பி சதுர்வேதி தலைமையிலான நெல்லை தனிப்படை போலீசார் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் வெளிநாடு தப்பி செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு காலத்தில் ரவுடிகள் சாம்ராஜியத்தில் கொடி கட்டி பறந்தவர். இவருக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ஆனைக்குடியாகும்.
ரவுடியானது எப்படி?
1990 கால கட்டங்களில் ஜாதி ரீதியான சண்டைகள் கட்டப்பஞ்சாயத்து அடிதடி என பல்வேறு சம்பவங்களில் ராக்கெட் ராஜா ஈடுபட்டு வந்தார். நாடார் சமுதாயத்தின் முக்கிய தலைவராக அறியப்படும் கராத்தே செல்வினின் சீடராக இருந்தார். பின்னாளில் வெங்கடேஷ் பண்ணையாரின் வலது கரமாக இருந்து வந்தார். அதன் பின்னர் அவரது மறைவுக்கு பிறகு சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் கொலை வழக்கு, பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கு என பல்வேறு கொலை வழக்குகளில் சந்தேகிக்கப்பட்டு மாநில அளவில் ரவுடிகள் பட்டியலில் முக்கிய இடம் பெற்றிருந்தார்.
இவரது வீட்டில் ராக்கெட் லாஞ்சர், ஏகே 47 துப்பாக்கிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஸ்கெட்ச் போடுவதில் தொடங்கி செயலை முடிப்பது வரை ராக்கெட் வேகத்தில் செயல்படுவதால் இவரை ராக்கெட் ராஜா என்று அடைமொழியுடன் அழைத்து வந்தனர். இப்போதுள்ள இளைஞர்களுக்கு ராக்கெட் ராஜா பற்றி பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், 90 கிட்ஸ் இளைஞர்கள் ராக்கெட் ராஜாவை நன்கு அறிந்திருப்பார்கள். 90 கால கட்டங்களில் காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் 2017 ஆம் ஆண்டு காவல்துறை தன்னை என்கவுண்டரில் சுட்டு கொல்ல திட்டமிட்டிருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியவர் இது போன்று பிரபல ரவுடியாக வலம் வந்த ராக்கெட் ராஜா சமீப காலமாக அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார்.
நாடார் மக்கள் சக்தி
ஏற்கனவே நாடார் மக்கள் சக்தி என்ற அமைப்பை தொடங்கியவர் பின்னாளில் பனங்காட்டு படை கட்சி என்ற கட்சியை தொடங்கி அதன் நிறுவனத் தலைவராக செயல்பட்டு வருகிறார். மேலும் தற்போது கர்நாடக சிறையில் இருக்கும் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாருடன் இணைந்து 2022 சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக இருவரும் ஆலங்குளம் பகுதியில் ஹரி நாடாருக்காக பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் வந்து இறங்கி ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க செய்தனர். குறிப்பிட்ட சமுதாயத்தின் தலைவராக பார்க்கப்பட்ட ராக்கெட் ராஜா நேரடியாக களத்தில் வந்து பிரச்சாரம் செய்த காரணத்தால் அத்தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் ஹரிநாடார் சுமார் 30000 வாக்குகள் பெற்று திமுகவின் முக்கிய புள்ளியான பூங்கோதை ஆலடி அருணா தோற்க காரணமாக இருந்தார்.
ஆனால், தேர்தலுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. மோசடி வழக்கில் ஹரிநாடார் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டு அங்கு கடும் சித்திரவதைகளை சந்தித்து வருவதாக ஹரிநாடார் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், அடுத்தடுத்து ராக்கெட் ராஜா மீது சிறையில் இருந்தபடி ஹரி நாடார் பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்து வருகிறார். இது போன்ற நிலையில் ராக்கெட் ராஜா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.