ஆப்நகரம்

விஷமாக மாறிய பால்..! 3 மாத குழந்தை பரிதாப பலி... விழுப்புரத்தில் சோகம்

விழுப்புரம் அருகே பாலில் விஷம் கலந்து பெண் குழந்தையை கொலை செய்துள்ள பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Oct 2020, 2:41 pm
விழுப்புரம் மாவட்டம் பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா. தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வரும் இவருக்கு யாஸ்மின் என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கொரோனா ஊரடங்கில் பொருளாதாரத்தை இழந்து வறுமைக்கு தள்ளப்பட்ட தமிழக குடும்பங்களில் சாதிக் பாஷாவின் குடும்பமும் ஒன்று. அன்றாட வாழ்க்கையை வறுமையில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil file pic model image india times


இந்த நிலையில் சாதிக் பாஷாவின் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பம் அடைந்தார். அதன்படி அவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஆலயா பானு என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி அன்று காலை ஆலயா பானு கண் விழிக்காமல் பேச்சு மூச்சின்றி இருந்ததால் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சாதிக் பாஷா, குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை நடத்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தைக்கு கொடுக்கப்பட்ட பாலில் பூச்சி மருந்து கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அதையடுத்து, போலீசார் குழந்தையின் தாய் யாஸ்மினிடம் விசாரித்தனர். அப்போது, ஏற்கெனெவே வறுமையில் உள்ள எங்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் பாலில் பூச்சி மருந்தை கொடுத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து யாஸ்மினை கைது செய்த போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மகளிர் சிறையில் அடைத்தனர்.

வறுமை என தெரிந்தும் கர்ப்பம் அடைந்து குழந்தையை விஷம் வைத்து கொன்ற தாயின் செயல் ஒட்டுமொத்த தாய்மார்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்கள், அதற்காக வரம் கேக்கும் எத்தனையோ தம்பதிகளிடம் ஒப்படைக்கலாம் அல்லது குழந்தை காப்பகங்களில் ஒப்படைக்கலாம். அதை விட்டுவிட்டு கள்ளிப்பால் கொடுப்பதும், விஷம் வைத்து கொள்வதும் மனித இனத்தையே அவமதிக்கும் செயல் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த செய்தி