ஆப்நகரம்

கணவர் திட்டியதால் டிக்-டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி!

கணவர் திட்டியதால், மனமுடைந்து டிக்-டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அரியலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Jun 2019, 12:29 pm
அரியலூர் அருகே கணவர் திட்டியதால், மனமுடைந்து டிக்-டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கணவர் திட்டியதால் டிக்-டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி!
கணவர் திட்டியதால் டிக்-டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி!


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்த தங்கமணி மகள் அனிதா (வயது 24). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர்.

பழனிவேலு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால், அனிதா கணவரின் ஊரான சீராநத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்புடன் குடும்பம் நடத்தி வந்த அனிதா, டிக்-டாக் செயலியால் ஈர்க்கப்பட்டு குழந்தைகளை கூட சரிவர கவனிக்காமல் இருந்து வந்தார். குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாக காட்டுவது போன்றவைகளை பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அனிதாவின் செயல்பாடு குறித்து, வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகள் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார். அவளை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லாமல் அனிதா இருந்துள்ளார்.

தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதனை தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்த அவர், பின்னர் தண்ணீரை குடிக்கிறார். ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை எட்டுகிறது. இப்படி வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.

டிக்-டாக் வீடியோவுக்கு அடிமையாகி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி