ஆப்நகரம்

இளைஞர் கொலை.. தலையை தனியாக எடுத்து சென்ற கும்பல்.. சிவகங்கையில் பயங்கரம்

மானாமதுரை அருகே 27 வயதுடைய நபர் கொலை செய்து தலையை வெட்டி எடுத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலையை தேடிவரும் போலீசார், மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 1 Dec 2022, 2:22 pm
தமிழகத்தில் நிகழும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் மக்களை பீதியடைய வைக்கிறது. சட்ட ஒழுங்கில் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சைபர் க்ரைம் குற்றங்களும் அதிகரித்துள்ளதால் காவல்துறை திணறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Samayam Tamil sivagangai murder


பட்டப்பகலில் பொது இடத்தில் கல்லூரி மாணவி கொலை, கார் குண்டு வெடிப்பு என தனிமனித குற்றம் முதல் தீவிரவாத தாக்குதல் வரை தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் இளைஞரை கொன்று தலையை தனியாக எடுத்து சென்ற கும்பலின் செயல் மாவட்டத்தை பரப்ரபாக்கியுள்ளது.

மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செந்திவேல் மகன் ராமு. 27 வயதான இவர் நேற்று மாலை முதல் காணவில்லை என கூறப்படுகிறது. இவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும், கிடைக்கவில்லை. இந்த நிலையில், இன்று அதிகாலை இம்மனேந்தல் கண்மாய் கரையில் அடையாளம் தெரியாத இளைஞர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஊர் மக்களுக்கு தகவல் கிடைத்தது.

பதறிப்போன ராமுவின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தேடப்பட்டு வந்த ராமு என்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி கண்ணன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட ராமுவின் தலை கண்மாயில் கிடக்கிறதா என தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட ராமுவின் நண்பர்கள் மற்றும் எதிரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர் கொலை செய்யப்பட்டு தலையை வெட்டி எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் தலை கிடைத்தால் மட்டுமே கொலையாளிகளை குறித்து மேற்படி விசாரிக்க முடியும் என்பதால் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி