ஆப்நகரம்

கோர்ட் வளாகம் அருகே வாலிபர் படுகொலை.. கோவையில் பயங்கரம்..!

கோவை நீதிமன்றம் அருகே வாலிபர் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Feb 2023, 1:05 pm
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு கடைகள், வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த இரு இளைஞர்கள் மீது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
Samayam Tamil murder


மற்றொரு இளைஞருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பலியான இளைஞரின் உடலை மீட்டு, மற்றொரு இளைஞரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் மாநகர காவல் துணை ஆணையர் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நிமிட நேரத்தில் கோவை நீதிமன்ற வளாகம் பின்புறம் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாகரன் இருக்கிறார் என்பது போலியான நம்பிக்கை - நாம் தமிழர் ரியாக்ஷ்ன்

அந்த இளைஞர்கள் நீதிமன்ற விசாரணைக்காக வந்ததாக கூறப்படும் நிலையில் இளைஞர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை காவல்துறை விசாரணைக்குப் பிறகே காயமடைந்தவர்கள் யார்? அவர்களை தாக்கியது யாராக இருக்கக் கூடும் என தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளைஞர்களை துரத்தி வெட்டும் காட்சியை அப்பகுதியில் இருந்த ஒருவர் படம்பிடித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி