ஆப்நகரம்

சீரழிக்க வந்தவனை குத்தி கொலை செய்த பெண்..! திருவள்ளூர் காவல் நிலையத்தில் சரண்

திருவள்ளூர் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்ற இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்

Samayam Tamil 3 Jan 2021, 6:18 pm
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதமி. இவருக்கு வயது 19. இந்நிலையில் நேற்றிரவு 10 மணி அளவில் கவுதமி இயற்கை உபாதைக்காக அப்பகுதியில் உள்ள மறைவான இடத்துக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து அஜித்குமார் (25) என்ற இளைஞர் பின்னாடியே சென்றுள்ளார்.
Samayam Tamil ajith kumar


அந்த வாலிபர் கவுதமியின் உறவுக்காரர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மறைவான பகுதியில் கவுதமி சென்று விட்டதும், கையில் கத்தியுடன் சடாரென வந்த வாலிபரை பார்த்து கவுதமி பதறியுள்ளார். தொடர்ந்து, சத்தம் போடாதே என்று மிரட்டிய அஜித்குமார், கத்தி முனையில் கவுதமியை பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அவரது பிடியில் இருந்து தப்ப முயன்ற கவுதமியை வலுக்கட்டாயமாக சித்ரவதை செய்துள்ளார் அஜித்குமார்.

இதனால் ஆத்திரமடைந்த கவுதமி வாலிபரின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கழுத்து, முகம், கை என பல இடங்களில் குத்து வாங்கிய அஜித்குமார் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட கவுதமி சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி சரணடைந்தார்.

வீட்டுக்கு வரும் நண்பன், படுக்கை வரை சென்ற அவலம்... கண்டித்த கணவன் கொலை

தொடர்ந்து போலீசார் கவுதமியை சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் அஜித்குமார் இறந்து கிடந்ததை உறுதி செய்தனர். இந்நிலையில், அஜித்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் தொடர்பாக கவுதமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இயற்கை உபாதையை கழிக்க ஊருக்கு ஒதுக்குபுறமாக செல்லும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ய வந்த வாலிபரை இளம்பெண் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி