ஆப்நகரம்

அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் - சவுக்கு சங்கருக்கு அடுத்த ஷாக்!

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அரசு பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 24 Sep 2022, 2:32 pm
நீதித்துறையில் ஊழல் நிறைந்துள்ளது என்று பேசியதாக அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
Samayam Tamil savukku shankar


சவுக்கு சங்கரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் சவுக்கு சங்கரை 6 மாதம் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். மேலும், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு காரணமான பதிவுகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொழில்நுட்பத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு குறித்து முகநூல், கூகுள், ட்விட்டர் சமூக வலைதளங்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழிக்கில் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை, பணியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டி நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சவுக்கு சங்கர் ஏற்க மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறையில் சிறப்பு உதவியாளராக இருந்து வந்த சவுக்கு சங்கர் மீது டிவிஏசியின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இத்தனை காலம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சங்கரை தற்போது அரசு பணியில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி