ஆப்நகரம்

குரூப் 2 தேர்வு எழுதிவிட்டு காதலனுடன் பைக்கில் சென்ற கல்லூரி மாணவி விபத்தில் பலி!

கடலூர் மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு எழுதிவிட்டு காதலனுடன் பைக்கில் சென்ற போது பேருந்து மோதி கல்லூரி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Nov 2018, 11:54 am
கடலூர் மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு எழுதிவிட்டு காதலனுடன் பைக்கில் சென்ற போது பேருந்து மோதி கல்லூரி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil bike


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகிலுள்ள கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்க்கவி (22). இவர், சிதம்பரத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ராஜதுரை சிதம்பரத்தில் உள்ள ஸ்டூடியோவில் பணியாற்றி வருகிறார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், பார்க்கவியின் படிப்பு முடிந்ததும், திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத சிதம்பரம் பி.முட்லூர் அரசு கல்லூரிக்கு ராஜதுரையுடன் பைக்கில் சென்றிருந்தார் பார்க்கவி. இதையடுத்து, தேர்வு எழுதி முடித்த பிறகு, ராஜதுரை, பார்க்கவியை பைக்கில் அழைத்துக்கொண்டு சிதம்பரம் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

சிதம்பரம், வேணுகோபால்பிள்ளை தெரு அருகில் சென்ற போது, கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று பைக் மீது மோதியது. இதில், 2 பேரும் சாலையில் விழுந்தனர். அப்போது, பேருந்தின் பின்புற சக்கரம், பார்க்கவியின் தலையில் ஏறி இறங்கியது. இதில், தலை நசுங்கிய நிலையில், சம்பவ இடத்திலேயே பார்க்கவி பலியானார். எனினும், ராஜதுரை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அடுத்த செய்தி