ஆப்நகரம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே செல்கிறது.

Samayam Tamil 24 May 2022, 5:16 pm
தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, ராசிமணல், கெம்பாகரை உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த 5 நாட்களுக்கு முன்பு விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் சென்றது.
Samayam Tamil hogenakkal water falls
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி


இதனால், காவிரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. ஆனால், தற்போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்து காணப்படுவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.

மே 23-ம் தேதி விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து இன்று மேலும் குறைந்து 10 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இருப்பினும், மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கு விதித்த தடை ஆறாவது நாளாக தொடர்கிறது. நீர் வரத்து குறைந்துள்ளதால் விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இதனிடையே, குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணையை பாசன வசதிக்காக முன்னதாகவே திறக்க அரசு திட்டமிட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் பிரதான மதகுகள் வழியாக தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அடுத்த செய்தி