ஆப்நகரம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு; காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Samayam Tamil 20 May 2022, 8:03 am
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு பரோல் வழங்கியிருந்த தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியிருந்தது.
Samayam Tamil Govi Chitrarasu
கோப்புப்படம்


இதனிடையே, தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. பேரறிவாளன் விடுதலைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும், காங்கிரஸ் கட்சியின் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் பேரறிவாளன் நிரபராதி இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மே 19-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வாயில் வெள்ளைத்துணி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.
தருமபுரி: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வர்களுக்கு அவசர அறிவிப்பு!

அதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அதில், "உலகம் போற்றும் உத்தம தலைவர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களை கொன்ற கொலை குற்றவாளியை கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை.எனவே நான் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன். எனது பதவி விலகலை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். அமரர் ராஜீவ் காந்தி புகழ் ஓங்குக! நன்று!" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி