ஆப்நகரம்

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றில் விநாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் செல்வதால் பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Samayam Tamil 25 May 2022, 8:21 am
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த தொடர்மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் பெருகெடுத்து ஓடியது.
Samayam Tamil hogenakkal falls
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி


பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் கடந்த 19-ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதோடு, கர்நாடகாவின் கபினி அணையில் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், காவிரியில் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று(25.05.2022) காலை 9 மணி முதல் நீக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார். இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி