ஆப்நகரம்

ஆளுங்கட்சியை அதிர வைத்த அன்புமணி.. பாமகவினர் உற்சாகம்!

தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கியுள்ள யாத்திரைக்கு தருமபுரி மாவட்ட மக்கள் அமோக ஆதரவளித்துள்ளதால் ஆளும் திமுகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Samayam Tamil 21 Aug 2022, 4:15 pm
தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கியுள்ள நடைப்பயணத்திற்கு பொதுமக்கள் அமோக ஆதரவளித்துள்ளதால் ஆளும் திமுகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Samayam Tamil sources says dmk dharmapuri dmk upset on pmk president anbumani ramadoss rally for cauvery surplus water scheme
ஆளுங்கட்சியை அதிர வைத்த அன்புமணி.. பாமகவினர் உற்சாகம்!



தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம்

தருமபுரி மாவட்ட மக்களின் நலனுக்காக தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஆகஸ்ட் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் மாவட்டம் முழுவதும் நடைப்பயணம் செல்ல திட்டமிடப்பட்டது. தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம் என்றால் என்ன?, உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவது எப்படி?, தருமபுரியில் எதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்? இந்த திட்டத்தின் பயன் மற்றும் பாமக மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன? என்பது குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறும் பிரச்சாரமே நடைப்பயணத்தின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.

அன்புமணியின் திட்டம் வெற்றி?

தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம் பிரச்சார யாத்திரையின் முதல் நாள் பயணம் நேற்று ஒகேனக்கலில் இருந்து தொடங்கியது. இதில் சுமார் 5,000 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஒகேனக்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், தருமபுரியில் ஆண்டொன்றுக்கு மூவாயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் மூலம் மட்டும் வருவாயை பெறும் தமிழக அரசு ரூ.700 கோடி செலவு செய்து காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, பென்னாகரம், இண்டூர், பி.அக்ரஹாரம், சோம்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து திட்டம் குறித்து எடுத்துக்கூறியதோடு அதற்கான நோட்டீஸையும் வழங்கினார்.

குழந்தையை கொஞ்சிய அன்புமணி ராமதாஸ்

பிரச்சார நடைப்பயணத்தின் போது அன்புமணி ராமதாஸுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றதோடு, மாலை மரியாதை என தேர்தல் பிரச்சாரம் போல் இருந்தது. பி.அக்ரஹாரம் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் வேடம் அணிந்திருந்த குழந்தை ஒன்றை தூக்கிய அன்புமணி ராமதாஸ் சிறிது நேரம் கொஞ்சி விளையாடினார்.

தருமபுரி திமுகவினர் அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டத்தில் ஏற்கனவே பலம் வாய்ந்த கட்சியாக உள்ள பாமக, மாவட்டத்தின் முக்கிய பிரச்சனையை கையில் எடுத்துள்ளதோடு, திரளான மக்களை கூட்டுவது திமுகவினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாமக செய்யும் இந்த யாத்திரையில் கட்சி வேறுபாடின்றி மக்கள் கலந்துக்கொள்ள வேண்டும் என அன்புமணி கூறியிருந்தாலும், கூட்டத்தில் பங்கேற்றும் பெரும்பாலானோர் பாமக கட்சிக்கொடி, துண்டு அணிந்திருப்பது திமுகவினரை அதிர வைத்துள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அடித்தளம்

2021 சட்டமன்ற தேர்தலில் தருமபுரியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத திமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது மீண்டும் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கான வேலையை இன்னும் தொடங்கவில்லை, அமைச்சர்கள் மாவட்டத்திற்கு வரும் போது மட்டும் பம்பரமாய் சுற்றும் திமுகவினர் அதன் பின்னர் அமைதியாக இருப்பது திமுக தொண்டர்களையே வெறுப்படையச் செய்துள்ளது அதனை சாதமாக பயன்படுத்திய பாமக தற்போது இந்த நடைப்பயணத் திட்டம் மூலம் தனது பலத்தை மேலும் மெருகேற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி