ஆப்நகரம்

கலெக்டர் காரையே பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள்… காரணம் என்ன?

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 28 Sep 2021, 2:11 pm
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது , அரசு சார்பில் குறைவான தொகை வழங்கப்பட்டதாக கூறி பாவாயம்மாள் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Samayam Tamil ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்


இந்த வழக்கில் பாவாயம்மாளுக்கு 28 லட்சத்து 26 ஆயிரத்து 252 ரூபாய் வழங்க 1994 ம் ஆண்டு ஈரோடு மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதில் 3 லட்சம் ரூபாய் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

கடந்த 27 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தொகையை வழங்கக்கோரி பாவாயம்மாள் மேல் முறையீடு செய்ததன் பேரில், ஈரோடு மாவட்ட கலெக்டர் பயன்படுத்தி வந்த பழைய காரை ஜப்தி செய்ய ஈரோடு மாவட்ட முதன்மை கூடுதல் சார்பு நீதிபதி செல்வகுமார் ராஜவேலு உத்தரவிட்டார்.

பானிபூரி சாப்பிட்ட பெண் மயங்கி விழுந்து மரணம்... ஈரோட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

அதைத்தொடர்ந்து அமினா உள்ளிட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, ஆட்சியர் பயன்படுத்தி வந்த பழைய காரை ஜப்தி செய்ய முயன்றனர். ஆனால் அந்த கார் ஓடும் நிலையில் இல்லாததால் அதனை கட்டி இழுத்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

இதுகுறித்த நீதிமன்ற உத்தரவினை ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசனிடம் அமினா வழங்கினார். அப்போது விரைவில் நிலுவைத் தொகையை செலுத்தி விடுவதாக அவர் உறுதி அளித்தார். அதன் பின்னர் நீதிமன்ற ஊழியர்கள் காரை இழுத்துச் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர். நீதிமன்ற ஊழியர்களின் இந்த நடவடிக்கையால் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி