ஆப்நகரம்

கம்பி வலைக்குள் சிக்கிய கருங்கல் சிறுத்தை... ஈரோடு மக்கள் நிம்மதி!

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் உள்ள கல்குவாரிகளில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

Samayam Tamil 4 Jan 2022, 8:16 pm
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியான ஜீரஹள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட குருபரகுண்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை சிறுத்தை ஒன்று ஒருவருடங்களுக்கு மேலாக அங்குள்ள கல்குவாரியில் பதுங்கிக்கொண்டு மேய்ச்சலுக்கு கொண்டுச்செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட நாய்களை கொன்றுள்ளது.
Samayam Tamil Erode leopard catches


இதனால் அந்த ஒற்றை சிறுத்தையை பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும், ஆடுகளை கொன்றுவிடுவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இதனிடையே, அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டது. இறையை வேட்டியாடிய பிறகு சிறுத்தை கல்குவாரியில் பதுங்கிகொள்வதால், சிறுத்தையை பிடிப்பது பெரும் சவாலாக இருந்தது. இதனால் வனத்துறையினர் நீண்ட நாட்களாக திணறி வந்தனர்.

குருபரகுண்டி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கல் குவாரிகளில் இரவு நேரங்களில் இந்த சிறுத்தை நடமாடி வந்தது தெரியவந்தது. இதனால், குருபரகுண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முடிவு செய்து கூண்டுகள் வைத்தனர். வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று காலை சிறுத்தை வசமாக சிக்கிக்கொண்டது.

அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கூண்டில் சிக்கியது ஆண் சிறுத்தை என்றும் அதற்கு நான்கு வயது இருக்கும் எனவும் தெரிவித்தனர். ஜீரஹள்ளி வனச்சரகர் ராமலிங்கம் உள்ளிட்ட வனத்துறையினர் சிறுத்தையை அங்கிருந்து கொண்டு செல்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுத்தை கூண்டில் சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள், அதனை பார்க்கும் ஆர்வத்துடன் வந்தனர். பாதுகாப்பு கருதி பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

அடுத்த செய்தி