ஆப்நகரம்

6 பேருடன் வீட்டு வாசலில் வந்திறங்கிய ஹெலிகாப்டர்… திக் திக் நிமிடங்கள்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் ஆறு பேருடன் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Jan 2022, 3:37 pm
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது கடம்பூர் மலை. இந்த மலைப்பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தக்கான் என்பவர், தனது மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
Samayam Tamil Erode helicopter


இந்நிலையில் இன்று காலை சுமார் 11.30 மணி அளவில் விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, வானத்தில் பெரும் சத்தம் கேட்டுள்ளது. கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,500 உயரத்தில் உள்ள மலைப்பகுதி என்பதால் தற்போது கடும் பனி மூட்டமாக காணப்படுகிறது.

அந்த பனி மூட்டத்தை கிழித்து கொண்டு ஒரு சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்று வட்டமடித்தபடி தக்கான் வீட்டின் முன் உள்ள வாசலில் இறங்கும் முயற்சியில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், ஹெலிகாப்டர் கீழே விழுவதாக நினைத்து அலறியடித்து குடும்பத்துடன் ஓடியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வந்த 415 நபர்கள்… எத்தனை ஒமைக்ரான் பாதிப்பு?

சிறிது நேரம் வானில் வட்டமடித்து ஹெலிகாப்டர் வீட்டு வாசலில் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர் அதிலிருந்து சிலர் இறங்கியதை பார்த்து தங்கான் குடும்பத்தினர் அருகில் வந்து பார்த்து, அவர்களிடம் விசாரித்தபோது, பெங்களூரில் இருந்து பாலக்காடுக்கு மருத்துவ சிகிச்சைக்கு சென்ற போது கடும் பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டரை இயக்க முடியாததால் தரையிறங்கியதாக தெரிவித்தனர்.

இதனை அறிந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து ஹெலிகாப்டரை பார்த்து ரசித்ததோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பெங்களூரை சேர்ந்த 60 வயதுடைய நபருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கேரள மாநிலம் சென்றதும், அவருடன் மூன்று பேர் உடன் வந்துள்ளதும், பனி மூட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டரை பைலட் தரையிறக்கியதும் தெரிய வந்ததை அடுத்து,அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

அடுத்த செய்தி