ஆப்நகரம்

FACT CHECK: நடிகர் விஜய் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே உதவுவார்: தந்தை எஸ்.ஏ.சி.

நடிகர் விஜய் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே உதவுவார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது.

Samayam Tamil 23 Nov 2020, 5:17 pm
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடர்பான விஷயம் பெரும் விவாதத்துக்கு உள்ளான நிலையில், அவருக்கே தெரியாமல் கட்சி ஆரம்பிக்க பதிவு செய்ததாக அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்தார். மேலும், அந்த அரசியல் கட்சிக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விஷயங்கள் காரணமாக விஜய் தனது தந்தையுடன் பேசுவதில்லை என்று அவரது தாய் ஷோபாவும் தெரிவித்திருந்தார்.
Samayam Tamil நடிகர் விஜய்
நடிகர் விஜய்


பரவும் செய்தி

இந்த நிலையில், நடிகர் விஜய் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே உதவுவார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேதியிட்ட நியூஸ் 7 தொலைக்காட்சியின் கார்டில் “நிதியுதவி எங்களை போல் கஷ்டப்படும் குடும்பத்திடம் கேட்பது அரசுக்கு வெட்கக்கேடு. 10 பைசா கூட தர மாட்டேன். கிறிஸ்தவ மக்களுக்கு போதுமான நிதியுதவியை எனது மகன் செய்து வருகிறார். பணம் என்ன மரத்தில் காய்கிறதா?” என்று எஸ்.ஏ.சி. கூறியதாக தகவல் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே ஜோசப் விஜய் என்று பாஜகவினர் உடனான மோதலின் போது அக்கட்சியினரால் மத சாயம் பூசப்பட்ட விஜய், கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே உதவுவார் என்று கூறும் இந்த நியூஸ் கார்டை தங்களது பக்கத்தில் பகிரும் பலரும் விஜய்யை வ்கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.


உண்மை என்ன

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், அந்த புகைப்படம் போலியானது என தெரிய வந்துள்ளது. மேலும், விஜய்யின் தந்தை அது போன்று எந்த தகவலையும் கூறவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

சரிபார்ப்பு மற்றும் வழிமுறை

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த நியூஸ் கார்டின் டிசைன், எழுத்து வடிவம், எழுத்து பிழை உள்ளிட்டவைகள் அது போலியான நியூஸ் கார்டு என்பதை உறுதி படுத்துகிறது. மேலும், இது தொடர்பாக எஸ்.ஏ.சி.யின் நெருக்கமான வட்டாரங்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் அதுபோன்ற தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

FACT CHECK: நடராஜர் கோயிலில் சிலை மீது மட்டும் மழை பெய்த அதிசயம் உண்மையா?

மேலும், நியூஸ் 7 தொலைக்காட்சியும் இதுபோன்ற தகவலை வெளியிடவில்லை. அது போலியான நியூஸ் கார்டு என்று விளக்கமளித்துள்ளது. அதேபோல், இது தொடர்பான முக்கிய வார்த்தைகளை கொண்டு தேடிய போது, முன்னணி செய்தி நிறுவனங்கள் எதுவும் இதுபற்றிய செய்தியை வெளியிடவில்லை.

முடிவுஎனவே, நடிகர் விஜய் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே உதவுவார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் மற்றும் அந்த நியூஸ் கார்டு போலியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

அடுத்த செய்தி