ஆப்நகரம்

பாகிஸ்தான் பிரதமருடன் விருந்து உண்டாரா ராகுல் காந்தி?!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் அமர்ந்து மதிய உணவு உண்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலாக பரவியது. ஆனால், பரபரப்புக்காக பதிவிடப்பட்ட இப்புகைப்படம் போலியானது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 7 Sep 2019, 7:08 pm
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மதிய விருந்து உண்பது போன்ற ஒரு புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. "இம்ரான் கானுடன் விருந்து அருந்துபவர் யாரென பார்த்தீர்களா?"என்ற படவிளக்கத்துடன் வெளியான இப்புகைப்படத்தில், ராகுல் காந்தி சிக்கன் பிரியாணி சாப்பிடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Samayam Tamil IKRG.


இதேபோன்று, இம்ரான் கானுடன் பிரதமர் நரேந்திர மோடி உணவு அருந்துவது போன்ற புகைப்படம் ஒன்று, ஓராண்டுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு அதன் நம்பிக்கைத்தன்மையை ஆராய்ந்தபோது, அது டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் ஜோடிக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரிய வந்தது.

இம்ரான் கான் தனது இரண்டாவது மனைவியான ரெஹ்மான் கானுடன், கராச்சி வீட்டில் இரவு உணவு உண்னும்போது, பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது வழக்கம். அப்புகைப்படங்களை சஜிதா பலூஜ் என்ற பெண் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அந்த டுவிட்டர் புகைப்படத்தில், ரெஹ்மான் கானின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை எடுத்து சேர்த்திருந்தது டைம்ஸ் உண்மை கண்டறியும் குழுவின் ஆய்வில் தெரிய வந்தது.

அதே பாணியில் தற்போது. இம்ரான் கானுக்கு அருகே அமர்ந்து அவரது மனைவி உணவருந்தும் புகைப்படத்தில், ரெஹ்மான் கானின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கட்சித் தொண்டர்களுடன் ராகுல் காந்தி உணவருந்தும் புகைப்படம் ஒன்று காஙகிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்திலிருந்து ராகுலின் உருவத்தை மட்டும் வெட்டி எடுத்து, அதனை இம்ரான் கானின் புகைப்படத்துடன் இணைத்துள்ளனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனவே, பரபரப்புக்காக வெளியிடப்பட்ட இப்புகைப்படம் டிஜிட்டல் முறையில் செய்யப்பட்ட ஜிக்ஜாக் வேலை. இதில் துளியும் உண்மையில் என, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழுவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அடுத்த செய்தி