ஆப்நகரம்

ஆச்சரியப்படுத்திய 103 வயது முதியவர்; ஓட்டம் பிடித்த கொரோனா வைரஸ்!

கேரள மாநிலத்தில் வயதானவர்கள் பலரும் கொரோனா வைரஸில் இருந்து மீண்டும் வரும் ஆச்சரியம் தொடர்ந்து வருகிறது.

Samayam Tamil 19 Aug 2020, 5:21 am
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே முதல் வைரஸ் தொற்று கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார். அதன்பிறகு வெளிநாடுகளில் இருந்து வருகை புரிந்த நபர்களால் படிப்படியாக கோவிட்-19 பாதிப்பு நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. இதில் கேரளாவும் விதிவிலக்கல்ல. இந்த பாதிப்பிற்கு உரிய மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்தான உணவுகள் சிகிச்சையின் போது வழங்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil Kerala Old Man


அந்த வகையில் கேரள மாநிலத்தில் மூத்த குடிமக்கள் பலரும் குணமாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு சிறுவயது முதலே கேரள மக்கள் கடைபிடித்து வரும் உணவு பழக்க வழக்கங்களும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக வயதாகி விட்டாலே நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும் என்பார்கள். அதையும் மீறி கொரோனாவை ஓட ஓட விரட்டி முதியவர்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த பரீத் என்ற முதியவர் சமீபத்தில் குணமடைந்துள்ளார்.

கொரோனா: பக்தர்கள் இன்றி திறக்கப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோயில்!

இவருக்கு வயது 103. கடந்த ஜூலை 28ஆம் தேதி பரீத்திற்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே எர்ணாகுளத்தில் உள்ள கலமாசேரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரது வயது முதிர்வை கருத்தில் கொண்டு சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

அடுத்த 20 நாட்களில் கொரோனா வைரஸை விரட்டி அடித்திருக்கிறார். இவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் போது பலரும் பூங்கொத்து கொடுத்து மிகவும் உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தனர். இவரது மனைவி அமினா மற்றும் மகன் ஆகியோரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுபற்றி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், மூத்த குடிமக்களுக்கு சிகிச்சை அளித்து குணமடையச் செய்வதை மிகவும் பெருமையாக கருதுகிறோம் என்றார்.

கொரோனா: நாடாளுமன்ற கேண்டீனில் புதிய டிஷ் அறிமுகம்!

சமீபத்தில் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த ஆஸ்மா பீவி என்ற 105 வயது மூதாட்டியும், 93 மற்றும் 88 வயதான தம்பதியும் கோவிட்-19 பாதிப்பில் இருந்து முழுவதுமாக குணமாகி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி