ஆப்நகரம்

வடமாநிலங்களை புரட்டிப் போட்டுள்ள கனமழை... இதுவரை 110 பேர் பலி

உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழைக்கு, கடந்த நான்கு நாட்களில் மட்டும் 110 பேர் பலியாகியுள்ளனர்.

Samayam Tamil 29 Sep 2019, 11:43 pm
தென்மேற்கு பருவமழைக் காலம், கடந்த திங்கள்கிழமையுடன் முடிவடைந்துவிட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
Samayam Tamil bfp


இருப்பினும் எதிர்பாராதவிதமாக. உத்தரப் பிரதேசம், பிகார், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஆறு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதனால் இந்த மாநிலங்களின் பெரும்பாலான இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

குடிநீர், பால், உணவு என அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள இயலாமல் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின் விநியோகமும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் இம்மாநிலங்களின் பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

உ.பி.யில் 79 பலி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் கனமழைக்கு கடந்த நான்கு நாள்களில் மட்டும் மொத்தம் 79 பேர் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக நேற்று (சனிக்கிழமை) 25 பேர் உயிரிழந்தனர்.

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பாட்னா: உத்தரப் பிரதேச மாநிலத்தை போன்றே, பிகாரும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாட்னாவின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரில் மூழ்கியுள்ளதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

ரயில் உள்ளிட்டவற்றின் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. 14 மாவட்டங்களுக்கு மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, பிகாரில், அடுத்த இரண்டு தினங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களில் மட்டும் கனமழைக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 13 பேர் உயிரிழந்தனர். கனமழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி