ஆப்நகரம்

ஒன்னு, ரெண்டுனா பரவால; 187 பேரா? ஒருவேளை பணம் காய்க்கிற மரம் வைச்சிருப்பாங்களோ!

போபால்: புதிதாக தேர்வாகியுள்ள மத்தியப் பிரதேச எம்.எல்.ஏக்களில் 187 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.

Samayam Tamil 16 Dec 2018, 12:00 am
மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஆண்ட பாஜக வீழ்த்தப்பட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏக்களாக தேர்வானவர்களில் 187 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.
Samayam Tamil MLA Assets


இவர்களில் 109 பேர் பாஜகவிலும், 90 பேர் காங்கிரஸ் கட்சியிலும் இருக்கின்றன. ஒட்டுமொத்த பட்டியலில் விஜய்ராகவகார் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ சத்யேந்திரா பதக் ரூ.226 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இதேபோல் ரட்லாம் சிட்டி தொகுதி பாஜக எம்.எல்.ஏ சேதன்யா காஷ்யப் ரூ.204 கோடி உடன் 2வது இடத்தில் உள்ளார். தற்போது தேர்வாகியுள்ள எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பின் சராசரி ரூ.10 கோடி ஆகும். இது 2013ஆம் ஆண்டு சட்டமன்ற எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பை விட, இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய 86 எம்.எல்.ஏக்கள் மீண்டும் தேர்வானவர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் ரூ.7 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. அதாவது 80% என்பது குறிப்பிடத்தக்கது. பணம் குவிந்து கிடக்கும் இடத்தில், குற்றங்களும் நிறைந்திருக்கும் என்பது எழுதப்படாத சட்டம் போல.

மேற்கூறியவர்களில் 94 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான தகவல் ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு மூலம் தெரியவந்துள்ளது. 94 பேரில் 56 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

34 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏக்களும், இந்தப் பட்டியலில் அடங்குவர். 94 எம்.எல்.ஏக்களில் 47 பேரின் மீது தீவிர குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர்களில் 6 பேர் மீது கொலை முயற்சி, 3 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றம், ஒரு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி