ஆப்நகரம்

5 நாட்களில் 20 தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம் கடந்த வாரத்தில் 5 நாட்களில் 20 வழக்குகளில் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

Samayam Tamil 29 Sep 2018, 12:32 pm
உச்சநீதிமன்றம் கடந்த வாரத்தில் 5 நாட்களில் 20 வழக்குகளில் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
Samayam Tamil supreme-court-verdict-new-delhi-india_005e63d0-c33d-11e8-ac2f-8b6cbdfc246f


செப்டம்பர் 22 முதல் 28 வரையான 5 நாட்களில் உச்சநீதிமன்றம் பல்வேறு முக்கிய வழக்குகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி ஓய்வுபெற இருக்கும் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்புகளை அளித்திருக்கிறது.

திருமணத்திற்குப் பின் தகாத உறவு குறித்த வழக்கு, மசூதி இஸ்லாமிய வழிபாட்டின் அங்கமா என்பது குறித்த அயோத்தி துணை வழக்கு, ஆதார் அடையாளச் சான்று குறித்த வழக்கு, சபரி மலையில் பெண்கள் நுழைவது குறித்து வழக்கு மற்றும் சமூக ஆர்வலர்கள் ஐவர் கைது குறித்த வழக்கு என பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 26ஆம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு 9 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதில் ஆதார் அடையாளச் சான்று குறித்த தீர்ப்பு, நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்த தீர்ப்பு ஆகியவையும் அடங்கும்.

செப்டம்பர் 27ஆம் தேதி, திருமணம் ஆனதும் ‘கணவன் தனது மனைவிக்கு எஜமானன் இல்லை’ என்று கூறி திருமணமான பிறகு தகாத உறவு கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.

செப்டம்பர் 25ஆம் தேதி கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இது குறித்த உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது எனவும் நாடாளுமன்றத்திலேயே இதைப் பற்றி முடிவுசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கடந்த 5 நாட்களில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புகள் குறித்து கருத்து கூறிய பல சட்ட வல்லுநர்கள் உச்சநீதிமன்றத்தின் இச்செயல்பாடு மிகவும் அபூர்வமானது எனத் தெரிவித்துள்ளனர். “ஓய்வுபெறும் நீதிபதி ஒருவர் தனது கடைசி வாரப் பணியில் ஏராளமான வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை” என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அனில் மிஸ்ரா கூறியிருக்கிறார்.

நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்து தலைமை நீதிபதியாக பதவியேற்க இருப்பவர் நீதிபதி ரஞ்சன் கோகாய். முதல் முதலாக வடகிழக்கு இந்தியாவிலிருந்து தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பவர் என்ற பெருமை அவரைச் சேர்கிறது.

அடுத்த செய்தி