ஆப்நகரம்

பேச்சுவார்த்தை தோல்வி; ஜூன் 4 முதல் மெட்ரோ ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

நம்ம மெட்ரோ ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

Samayam Tamil 19 May 2018, 4:08 pm
பெங்களூரு: நம்ம மெட்ரோ ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
Samayam Tamil Namma Metro


சம்பள உயர்வு, ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிப்பு, அமைப்பு முறை மாற்றம், தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் ஆகிய கோரிக்கைகளை பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியர்கள் தொழிற்சங்கம் முன்வைத்துள்ளது.

இதற்காக வரும் ஜூன் 4ஆம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மெட்ரோ ரயில் ஊழியர்களில் ஒருபிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக கடந்த மார்ச் 22ஆம் தேதி, தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, ஒரு மாத கால வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கம் அறிவித்தது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இடையே பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டதை அடுத்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க துணைத் தலைவர் சூர்யநாராயண மூர்த்தி, மார்ச் 26 முதல் ஏப்ரல் 20 வரை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்து விட்டன. எங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிர்வாகத்தின் முன்வைத்தோம்.

ஆனால் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. மேலும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாது என்று தோன்றுகிறது. இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தொழிலாளர்கள் மீது எஸ்மா சட்டம் பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பேசுகையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. பொருளாதாரம் தவிர்த்த கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படும்.

வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்தால், நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும். அவர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மெட்ரோ ரயில் சேவை தொடர்ந்து இயங்கும் என்று தெரிவித்தார்.

After talks fail, Namma Metro staffers threaten to go on strike.

அடுத்த செய்தி