ஆப்நகரம்

போலீசாருக்கும் வார விடுமுறை - அசத்திய ஆந்திர முதல்வர்; நெகிழ்ந்த காவல்துறை!

ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் போலீசாருக்கும் வார விடுமுறை விடும் அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது.

Samayam Tamil 19 Jun 2019, 8:09 pm
ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இதேபோல் மக்களவை தேர்தலிலும் வெற்றியை வாரிக் குவித்தனர்.
Samayam Tamil Y-S-Jaganmohan-Reddy


இதன்மூலம் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியை நழுவ விட்டார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு, பல்வேறு அதிரடியான திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.

வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்குதல், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு நிதியுதவி, மாநில போக்குவரத்து கழகத்தை அரசே ஏற்று நடத்தும், விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.12,500, சுகாதாரத்துறை ஆஷா பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்டவை ஆகும்.

நாட்டிலேயே முதல் முறையாக 5 துணை முதலமைச்சர்களை நியமித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்த சூழலில் ஆந்திர மாநில போலீசாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி ஜெகன்மோகன் ரெட்டி அசத்தி உள்ளார்.

இனி தலைமைக் காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைத்து காவலர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் 19 மாடல் விடுமுறை முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்றை அதிகாரிகள் தேர்வு செய்து நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம். இந்தக் குழுவினர் வழங்கும் ஆலோசனைகள், காலத்திற்கு ஏற்ப படிப்படியாக அமலாக்கப்படும்.

அடுத்த செய்தி