ஆப்நகரம்

லடாக் எல்லைக்கு ராணுவத் தளபதி திடீர் பயணம் - பின்னணி என்ன?

சமீபத்தில் இந்திய எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி செயல்பட்ட நிலையில், ராணுவத் தளபதியின் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

Samayam Tamil 3 Sep 2020, 12:30 pm
லடாக் இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள பாங்காங் சோ ஏரி அருகே இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளில் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனை முறியடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவம் களம் கண்டு வருகிறது. இதுதொடர்பாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனில்லை. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் உடன்பட சீனா மறுத்து வருகிறது. அப்படியே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் அதனை மீறுவதில் தான் அக்கறை காட்டி வருகிறது.
Samayam Tamil MM Naravane


அந்த வகையில் கடந்த செவ்வாய் அன்று கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ ஏரிப் பகுதியில் இயல்பு நிலையை மாற்றி அமைக்கும் முயற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து விரைந்து செயல்பட்டு சீன ராணுவத்தினர் விரட்டி அடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவின் தரப்போ இந்தியாவின் மீது பழிபோட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாங்காங் ஏரியின் தெற்கு கரைப் பகுதியில் மூன்று வெவ்வேறு உயரங்களில் இந்திய ராணுவத்தினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சுட்டு விடும் தொலைவில் இந்திய - சீன படைகள்; ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

மேலும் சீன ராணுவத்தின் கண்காணிப்பு கேமராக்களை இந்திய ராணுவம் அடித்து நொறுக்கியது. இந்நிலையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ராணுவத் தளபதி எம்.எம் நரவனே இன்று லடாக் செல்கிறார். அங்கு ராணுவத்தின் செயல்பாடுகள், தற்போதைய பதற்றமான சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்திய - சீன எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. அதில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.

அடுத்த செய்தி