ஆப்நகரம்

அர்னாப் கோஸ்வாமியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!

பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 5 Nov 2020, 12:34 am

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்த அன்வய் நாயக் என்பவருக்கு தர வேண்டிய ரூ.5.40 கோடி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து 2018ஆம் ஆண்டு அன்வய் நாயக்கும் அவரது தயாரும் தங்களது பண்ணை வீட்டில் தற்கொலைசெய்துகொண்டனர்.
Samayam Tamil அர்னாப் கோஸ்வாமி


அவர்கள் இருவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமி மீது அன்வய் நாயக்கின் மனைவி அக்‌ஷதா போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரித்து முடித்து வைக்கப்பட்ட நிலையில், அன்வய் நாயக்கின் மகள் அட்ன்யா கொடுத்த புதிய புகாரின் பேரில் இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென மே மாதம் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அர்னாப் கைதுக்கு கொந்தளிக்கும் பாஜக; பின்னணி அரசியல் காரணம் என்ன?

இவ்விவகாரத்தில் அர்னாப் கோஸ்வாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் அர்னாப் கோஸ்வாமியை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதற்கு பாஜக வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவதேகர் உள்ளிட்டோரும் பல்வேறு பாஜக தலைவர்களும், பிரமுகர்களும் அர்னாப் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனால் மும்பையில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை (நவம்பர் 5) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவரது வழக்கறிஞர் அபத் பொண்டா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி