ஆப்நகரம்

வரலாம்..வரலாம்...வாங்க... சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் சிவப்பு கம்பள அழைப்பு விடுத்துள்ள ஜம்மு -காஷ்மீர்!

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் இன்று அறிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Oct 2019, 10:58 pm
இயற்கை எழில் கொஞ்சம் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய வருவாயாக சுற்றுலா விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் இங்கு லட்சக்கணக்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
Samayam Tamil jak


இந்த நிலையில், இம்மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. அத்துடன் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அரசு அறிவித்தது.

இதையடுத்து, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரிவினைவாதிகள், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் ஆகியோரால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாதவண்ணம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு அரசு நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதன் விளைவாக ஜம்மு -காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதலபாதளத்துக்கு சென்றது.

இந்த நிலையில், மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக், மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் இன்று விரிவான ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுவதாக ஆளுநர் இன்று அறிவித்துள்ளார். அத்துடன், இந்த உத்தரவு வரும் வியாழக்கிழமை முதல் ( அக்.10) அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக கலையிழந்து காணப்பட்ட சுற்றுலா ஸ்தலங்கள் இனி களைக்கட்டும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த செய்தி