ஆப்நகரம்

மணிக்கு 1,080 கி.மீ ஸ்பீடு; பெங்களூருவை புரட்டி போடப் போகும் ஹைபர்லூப் போக்குவரத்து!

பெங்களூருவில் அதிவேகப் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஹைபர்லூப் போக்குவரத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Sep 2020, 6:12 am
கலிபோர்னியாவைச் சேர்ந்த போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் விர்ஜின் ஹைபர்லூப்(Virgin Hyperloop). இது உலகின் பல்வேறு நாடுகளில் நவீன ஹைபர்லூப் போக்குவரத்து வசதியைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஹைபர்லூப் போக்குவரத்து தொழில்நுட்பத்தின் மூலம் மணிக்கு 1,080 கிலோமீட்டர் வேகத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம். அதாவது உலகின் அதிவேக ரயிலை விட 10 மடங்கு வேகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil bengaluru city to airport in just 10 minutes via hyperloop transport
மணிக்கு 1,080 கி.மீ ஸ்பீடு; பெங்களூருவை புரட்டி போடப் போகும் ஹைபர்லூப் போக்குவரத்து!


ஹைபர்லூப் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இந்நிறுவனம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துடன் கடந்த ஞாயிறு அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற சந்திப்பில் ஹைபர்லூப் நிறுவனத்தின் தலைவர் சுல்தான் பின் சுலையம், கர்நாடகா தலைமைச் செயலாளரும், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் தலைவருமான டி.எம்.விஜய் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் இருதரப்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, பெங்களூரு நகரின் மையப்பகுதியில் இருந்து கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நவீன ஹைபர்லூப் போக்குவரத்து வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு சிட்டி டூ விமான நிலையம்

இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த வழித்தடத்தை வெறும் 10 நிமிடங்களில் கடந்து விடலாம். மேற்கூறிய ஒப்பந்தப்படி, ஹைபர்லூப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த தொழில்நுட்ப, பொருளாதார, உகந்த வழித்தட வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. இது இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் சுல்தான் பின் கூறுகையில், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதில் மிகவும் பெருமைப்படுகிறோம்.


அடுத்த டார்கெட் இதுவா? சீறிப் பாயப் போகும் புல்லட் ரயில் - ஆச்சரியமூட்டும் தகவல்!

சரக்குப் போக்குவரத்தும் சாத்தியம்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு நகரில் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் வகையில் எங்களது தொழில்நுட்பம் உறுதுணையாக இருக்கும். விமான நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவை. இங்கு பயணிகளுக்கு மட்டுமல்லாது, சரக்குப் போக்குவரத்திற்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. சில பொருட்கள் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இதை ஹைபர்லூப் போக்குவரத்து சாத்தியப்படுத்துகிறது என்றார்.

அதிவேக வளர்ச்சியில் பெங்களூரு

இதேபோல் விர்ஜின் ஹைபர்லூப் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜே வால்டர் கூறுகையில், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் கூடாரமாக கர்நாடகா திகழ்கிறது. எனவே ஹைபர்லூப் தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக, தூய்மையான வளர்ச்சி, புதிய வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை பெங்களூரு நகரம் பெறும். விமான நிலையத்திற்கு அதிவேக பயணத்தை மட்டுமன்றி, 21ஆம் நூற்றாண்டின் சிறந்த பயணிகள் அனுபவத்தையும், விமான நிலையத்தின் திறனையும் விரிவாக்கம் செய்ய உதவும் என்று கூறினார்.

அரசு முழு ஒத்துழைப்பு

மேலும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத் தலைவர் டி.எம்.விஜய் பாஸ்கர் கூறுகையில், பெங்களூருவில் ஹைபர்லூப் போக்குவரத்திற்கான ஆய்வுகள் அனைத்தும் அரசின் முழு ஒத்துழைப்புடன் நடைபெறும். இந்த திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக பெங்களூரு உருவெடுக்கும் என்று தெரிவித்தார். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் தலைமை செயல் அதிகாரி ஹரி மாரர் கூறுகையில், ஹைபர்லூப் நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது.


நாட்டின் முதல் புல்லட் ரயில்; எந்த நிலையில் உள்ளது? எப்போது பயன்பாட்டிற்கு வருகிறது?

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை

இது நகரின் மையப்பகுதியை ஹைபர்லூப் போக்குவரத்தின் மூலம் விமான நிலையத்துடன் இணைக்கும் இந்தியாவின் முதல் முயற்சி. உலகத் தரத்திலான போக்குவரத்து வசதிக்கு புதுமையான தொழில்நுட்பங்கள் வழிவகுக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் அதிவேகமாக பயணிகளுக்கு சேவையளிக்கக் கூடியது ஹைபர்லூப் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில் இருந்து மும்பை நகருக்கு வெறும் 25 நிமிடங்களில் பயணிக்கும் வகையிலான ஹைபர்லூப் திட்டம் குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி