ஆப்நகரம்

ஜி.எஸ்.டி. மிகப்பெரிய முட்டாள் தனம்: சுப்ரமணியன் சுவாமி சாடல்

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள் தனம் என சாடிய சுப்ரமணியன் சுவாமி, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் நாட்டுக்கு 10 சதவீத வளர்ச்சி தேவை என தெரிவித்துள்ளார்

Samayam Tamil 20 Feb 2020, 7:54 pm
ஹைதராபாத்: மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள் தனம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சாடியுள்ளார்.
Samayam Tamil சுப்ரமணியன் சுவாமி
சுப்ரமணியன் சுவாமி


நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மூலம் 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்களில் வரி வசூலிக்கப்படுகிறது.

இந்த வரி விகிதங்கள் பொருட்களுக்கு ஏற்றாற்போல் மாறுபடும். அதேபோல், ஜிஎஸ்டி வரம்பில் இருந்து சில பொருட்களை நீக்க வேண்டும் எனவும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளை ஜிஎஸ்டி வரம்பினுள் கொண்டு வர வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வறுமையில் இந்தியா... மூடி மறைக்கும் மத்திய அரசு!

ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.

அதேசமயம், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இழப்பீடு வழங்குகிறது. ஜிஎஸ்டி அமலான ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த இழப்பீட்டை மத்திய அரசு மேலும் மூன்று ஆண்டுகள் தொடர வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் வலியுறுத்தி வருகின்றன.

கோவையை வாட்டும் பொருளாதார மந்தநிலை... தொழில் நகரத்துக்கு வந்த சோதனை!

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள் தனம் என சாடியுள்ளார். 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் நாட்டுக்கு 10 சதவீத வளர்ச்சி தேவை எனவும் சுவாமி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் ஆட்சி காலத்தில் பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைகள் கொண்டு வரப்பட்டன. இந்த இரண்டு திட்டங்களுக்கும் இன்றளவும் வரவேற்புகளும், எதிர்ப்புகளும் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி