ஆப்நகரம்

தேர்தலுக்கு பின் கலவர பூமியான மேற்குவங்கம் - மம்தாவை தூக்கி எறிய பாஜக அதிர்ச்சி திட்டம்!

பாஜகவினர் நடத்திய பேரணியில் கலவரம் மூண்டதால், போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 12 Jun 2019, 7:27 pm
மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக ஆச்சரியப்படும் வகையில் வெற்றிகளை குவித்துள்ளது. இது ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், 42ல் 34 தொகுதிகளை திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றி இருந்தது.
Samayam Tamil WB Violence.


ஆனால் 2019 தேர்தலில் 22 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. பாஜக 2 தொகுதிகளில் இருந்து, தற்போதைய தேர்தலில் 18 தொகுதிகளாக தங்கள் வெற்றியை மேம்படுத்தி உள்ளனர். முன்னதாக தேர்தலின் போதே பல்வேறு வன்முறைக் காட்சிகளை பாஜகவினர் அரங்கேற்றி இருந்தனர்.

மேலும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல்கள் வெடித்தன. இதில் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, பதற்றம் தொற்றிக் கொண்டது. உடனே மத்திய உள்துறை அமைச்சகம் மேற்குவங்க விவகாரத்தில் தலையிட ஆரம்பித்தது.

இதுதொடர்பாக ஆலோசனைக் குழு ஒன்றை, அம்மாநிலத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த வன்முறை சம்பவம் குறித்து மாநில ஆளுநர் கே.என்.திரிபாதி கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி? நிலவரம் என்ன?

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து மேற்குவங்க நிலவரம் குறித்து எடுத்துரைத்தார். இந்நிலையில் கலவரத்தை காரணமாக வைத்து, மேற்குவங்கத்தில் மம்தா ஆட்சியை கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வருமா என்று அச்சம் நிலவத் தொடங்கியது.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முதலமைச்சர் மம்தா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்குவங்கத்தில் ஆட்சியை கலைப்பதற்காகவே வன்முறையை ஏவிவிட்டு, பாஜக செயல்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரு பாஜகவினர் கொல்லப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து, பஷிர்ஹாத்தில் அக்கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர். இந்த சூழலில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆனால் கலைந்து செல்லாமல், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் தடியடி நடத்தி போலீசார் கலைக்க முற்பட்டனர். இந்தப் பேரணியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 18 பாஜக எம்.பிக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி