ஆப்நகரம்

எல்லாரும் வேலைக்கு போங்க: பிரேசில் அதிபர் அதிரடி!

கொரோனா வைரஸ் அச்சத்தை விடுத்து மக்கள் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்ப வேண்டுமென்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 25 Mar 2020, 5:19 pm
பிரேசில் நாட்டின் பெருநகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி பணிக்கு செல்ல வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil எல்லாரும் வேலைக்கு போங்க பிரேசில் அதிபர் அதிரடி


கொரோனா வைரஸ் கொள்ளை நோயின் அச்சுறுத்தல் உலகளவில் பரவியுள்ளது. அவ்வகையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் நோய் மேலும் பரவுவதை தடுப்பதற்காக தலைநகர் ரியோ டி ஜெனிரோ, நாட்டின் மிகப்பெரிய நகர் ஸா பாலோ உள்ளிட்ட நகரங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மார்ச் 24ஆம் தேதியன்று பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ நாட்டு மக்களுக்கு அளித்த உரையில், “நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். சில மாநிலங்களும், நகரங்களும் தங்களது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ரியோ, ஸா பாலோ நகரங்களை முடக்கியுள்ள ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகளை மாநில ஆளுநர்களும், மேயர்களும் ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கு மேலானவர்களை தாக்கி 19,000க்கும் மேலானவர்களை பலியாக்கியுள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் ஒரு கற்பனை எனவும், சாதாரண காய்ச்சல்தான் எனவும் பிரேசில் பிரதமர் அலட்சியமாக கூறிவருவதால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

நேற்று அவர் உரையாற்றியபோது ஏராளமான மக்கள் பானைகளாலும், பாத்திரங்களாலும் ஒலி எழுப்பி பாரம்பரிய முறையில் எதிர்ப்பை பதிவு செய்தனர். மக்களிடையே ஜெய்ர் போல்சனாரோவுக்கான ஆதரவு சரிந்து வருவதாக கருத்து கணிப்புகள் வாயிலாக தெரியவந்துள்ளது. பிரேசிலில் இளைஞர்கள் அதிகமாக இருப்பதாலும், வெப்பமான காலநிலை சாதகமாக இருப்பதாலும் இத்தாலியில் நடந்தது போல பிரேசிலில் உயிரிழப்புகள் ஏற்படாது என்று அவர் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் நான் வருந்துவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. எனக்கு எந்த கவலையும் இருக்காது. இது மற்றொரு வகையான காய்ச்சல்தான்” என்று கூறினார். மார்ச் 24 வரை பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்று இருப்போரின் எண்ணிக்கை 1,891ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி