ஆப்நகரம்

பஞ்சாபில் எதிர்ப்பை சம்பாதித்த பாஜக; வீழ்ச்சியடைகிறதா மோடி அலை?

பிரதமர் மோடியை கண்டித்து பஞ்சாபில் விவசாயிகள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 19 Oct 2020, 4:30 pm
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மோடியின் பிம்பத்தை மத்திய அரசு தொடர்ந்து தூக்கிப் பிடித்து வருகிறது. இதற்கான வேலைகள் பஞ்சாப் மாநிலத்திலும் அரங்கேறின. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, ஷிரோமணி அகாலி தளம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து மோடிக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்தன. அப்போது மோடியின் பெயர் தான் பிரதானமாக முன்னிறுத்தப்பட்டது. இது இந்து மக்கள் அதிகம் வாழும் பதான்கோட், ஹோஷியார்பூர் உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சில சட்டமன்ற தொகுதிகளிலும் நன்றாக வேலை செய்தது.
Samayam Tamil PM Modi


அதேசமயம் சீக்கியர்களும், தலித்களும் அதிகமிருக்கக் கூடிய தொகுதிகளில் மோடி அலை பெரிதாக வேலை செய்யவில்லை. இந்த சூழலில் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்கள் விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் எதிரொலியாக பாஜக கூட்டணியில் இருந்து ஷிரோமணி அகாலி தளமும் விலகியது.

இவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் மோடிக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்து தந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் மோடிக்கு எதிரான கோஷங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை காணாத அளவு எதிர்ப்பு வலுத்திருப்பது மாநில பாஜகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்ப்ரெட்டர் ஆக மாறுமா பீகார் தேர்தல்? காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!

நேற்றைய தினம் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடியின் உருவ பொம்மைகளை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். விவசாயிகள் நடத்திய கூட்டங்களில் பிரதமரையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் கடுமையாக திட்டி தீர்த்தனர். இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்திலும் பிரதமர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது கவனிக்கத்தக்கது.

இதன்மூலம் வட இந்திய மாநிலங்களில் மோடி அலை வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது அடுத்தடுத்து வரும் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் எதிரொலிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி