ஆப்நகரம்

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்த்த எடியூரப்பா; தலைவர்கள் கூறுவது என்ன!

எடியூரப்பாவின் ராஜினாமா குறித்து, அரசியல் தலைவர்கள் கூறிய கருத்துகளை இங்கே காணலாம்.

Samayam Tamil 19 May 2018, 6:08 pm
பெங்களூரு: எடியூரப்பாவின் ராஜினாமா குறித்து, அரசியல் தலைவர்கள் கூறிய கருத்துகளை இங்கே காணலாம்.
Samayam Tamil Karnataka Floor Test


கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், திடீரென எடியூரப்பா ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம், கர்நாடக மாநிலத்தில், பாவம், பொம்மை கவிழ்ந்து விழுந்து உடைந்தது. ஆனால் பொம்மலாட்டக்காரன்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகாவில் ஜனநாயகம் வெற்றி பெற்றுவிட்டது. அரசியலமைப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவிருந்த பாஜகவின் சதித்திட்டம் தோற்றுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிவில், ஜனநாயகம் வெற்றி பெற்றுவிட்டது. கர்நாடகாவிற்கு வாழ்த்துகள். தேவகவுடா, குமாரசாமி, காங்கிரஸ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பிராந்திய அணிக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எல்லாருக்கும் மகிழ்ச்சி தானே? ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவிக்கையில், ஆக்லாந்தில் இருந்து புறப்படுகையில், எடியூரப்பா ராஜினாமா என்று செய்திகள் வந்தது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

BS Yeddyurappa skips floor test Who said what.

அடுத்த செய்தி