ஆப்நகரம்

வெங்காயம் பதுக்கலை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து, சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் இவ்வளவுதான் வெங்காயத்தை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.

Samayam Tamil 29 Sep 2019, 5:41 pm
வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil osf


இதனால் சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் சில்லரை விற்பனையில் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.70 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிகளுக்கும் தடை விதித்து மத்திய அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை விதிப்பு தொடரும் எனவும் மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆயுத பூஜை, தீபாவளி என பண்டிகை காலம் நெருங்குவதால் வெங்காயத்தை பதுக்கி அவற்றை கூடுதல் விலைக்கு விற்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு, சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய வெங்காயத்தின் அளவுக்கு உச்சவரம்பை நிர்ணயித்து மத்திய அரசு அடுத்த அதிரடி நடடிக்கையை எடுத்துள்ளது.

இதன்படி, சில்லரை வியாபாரிகள் 100 குவிண்டாலும், மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் அளவுக்கும் தான் வெங்காயத்தை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

உணவுத் துறையின் இந்த உத்தரவை மீறி, அளவுக்கு அதிகமாக வெங்காயத்தை கையிருப்பில் வைத்திருக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்து உலகளவில் அதிகப்படியான வெங்காயத்தை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 2 கோடி டன்களுக்கு மேலாக நம் நாட்டில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 20 லட்சம் டன்கள் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி