ஆப்நகரம்

பதஞ்சலி கொரோனா மருந்து... பாபா ராம்தேவ் மீது மோசடி வழக்கு!

கொரோனா மருந்து அறிமுகப்படுத்திய விவகாரத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் உட்பட ஐந்து பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Jun 2020, 10:35 am
பதஞ்சலி நிறுவனம் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் ஜூன் 23ஆம் தேதியன்று ‘கொரோனில்’ என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது. இம்மருந்து கொரோனா நோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது எனவும் பகிரங்கமாக விளம்பரப்படுத்தியது.
Samayam Tamil பதஞ்சலி கொரோனா மருந்து அறிமுகம்


இம்மருந்தை ஏழு நாட்கள் சோதனை செய்ததில், மற்றொரு பதஞ்சலி தயாரிப்புடன் சேர்த்து இம்மருந்தை எடுத்துக்கொண்ட அத்தனை கொரோனா நோயாளிகளும் பூரண குணமடைந்துவிட்டதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த நிம்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மருந்து அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே மருந்து குறித்த ஆய்வு, சோதனை விவரங்களை மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்டது. மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் விவரங்களையும் ஆயுஷ் அமைச்சகம் கேட்டுள்ளது. மேலும், இப்பிரச்சினையை முழுமையாக ஆய்வு செய்யும் வரை மருந்தை விளம்பரம் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பல்ராம் ஜகத் என்ற வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் பாபா ராம்தேவ் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, நிம்ஸ் பல்கலைக்கழக இயக்குநர் பி.எஸ்.தொமார்; அவரது மகன் அனுராக் தொமார், மூத்த அறிவியலாளர் அனுராக் வர்ஷ்னே ஆகியோர் மீதும் மோசடி வழக்கு பதிவாகியுள்ளது.

பதஞ்சலி மருந்து விவகாரத்தில் பாபா ராம்தேவ் மீது பல்வேறு தரப்பினர் புகாரளித்துள்ளதாக ஜெய்ப்பூர் போலீஸ் டிசிபி அசோக் குப்தா தெரிவித்துள்ளார். பதஞ்சலி அறிமுகப்படுத்தியுள்ள மருந்துக்கு ஆயுஷ் அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என புகார் அளித்த வழக்கறிஞர் பல்ராம் ஜகத் குற்றம்சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி