ஆப்நகரம்

மலேசிய விமானம் மாயமான வழக்கு... கடுப்பான நீதிபதிகள்

ஐந்தாண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய பயணிகள் விமானம் குறித்து அறிவியல்ரீதியான விசாரணைக்கு உத்தரவிட கோரி, கேரளத்தை சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 9 Sep 2019, 7:36 pm
கேரளாவில் நடைபெற்றதாக சொல்லப்படும் ஓர் சம்பவத்துக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பீர்களா? என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Samayam Tamil CHP.


மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து, 2014 -ஆம் ஆண்டு மார்ச் 8 - ஆம் தேதி, மலேசிய போயிங் விமானம், 12 ஊழியர்கள், 227 பயணிகள் என மொத்தம் 239 பேருடன் சீன தலைநகர் பீஜிங்கை நோக்கி பயணித்தது.

துரதிருஷ்டவசமாக அந்த விமானம் வான்வெளியில் திடீரென மாயமானது. விமானம் எங்கே விழுந்தது? அதில் பயணித்தவர்களின் நிலை என்ன? என்பன போன்ற வினாக்களுக்கு இதுவரை தீர்க்கமான விடை இல்லை.

இந்த நிலையில், விமானம் மாயமானதாக சொல்லப்படும் அதே நாளில், தான் திருவனந்தபுரம் அந்தோணியார் கோவில் அருகே இருந்ததாகவும், அப்போது விமானம் ஒன்று அரபிக் கடலில் விழுந்ததை பார்த்தாகவும், திருவனந்தபுரத்தை சேர்ந்த பிஜுகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், மாயமான மலேசிய விமானத்தை கண்டறிய அறிவியல்ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி அண்மையில் அவர், சென்னை நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, " கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றதாக நீங்கள் சொல்லும் இந்தச் சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மலேசிய நாட்டின் துணைத் தூதரகம் சென்னையில் உள்ளதால், இவ்வழக்கை இங்கு தொடர்ந்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை எனக் கூறி, இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி